முகர்ந்து தான் பாக்கனுமோ.. கல்யாண வீட்டுக்காரர்களை கதற விடும் மல்லி.. விலையை கேட்டா ஷாக் ஆயிடுவீங்க..
திண்டுக்கல்: இன்று விநாயகர் சதுர்த்தி மற்றும் தொடர் முகூர்த்த தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூச்சந்தையில் மல்லிகை பூ கிலோ 1000 ரூபாய்க்கு மேல் விற்பனை ஆவதால் வசாயிகள் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் திருமண வீட்டார் விலையைக் கேட்டதும் சற்றே ஷாக் ஆகி, வேறு என்ன செய்வது என வாங்கிச் செல்கின்றனர்.
திண்டுக்கல் மாநகர் பகுதியில் அமைந்துள்ள அண்ணா பூ வணிக வளாகத்திற்கு திண்டுக்கல்லை சுற்றியுள்ள நிலக்கோட்டை, ஆத்தூர், சின்னாளபட்டி, நத்தம் ஆகிய பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் பூக்களை விவசாயிகள் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

மேலும் இங்கிருந்து கரூர், சேலம், நாமக்கல், கோயம்புத்தூர்,சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் தினசரி பூக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டிலேயே தோவாளைக்கு அடுத்தப்படியாக பூ மார்க்கெட்டிற்கு பெயர் பெற்ற திண்டுக்கல்லில் ஒரு கிலோ மல்லிகை உதிரி பூக்கள் ரூ.1,000 வரை விலை போகிறது. இதற்கு காரணம் நாளை விநாயகர் சதுர்த்தி மற்றும் நாளை மறுநாள் 2 தினங்களுமே முகூர்த்த நாள் என்பதேயாகும். அதுமட்டுமல்ல கடும் மழை மற்றும் இரவு நேரங்களில் பனிப் பொழிவால் மல்லிகை பூ சாகுபடியும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மார்க்கெட்டிற்கு மல்லிகை பூவின் வரத்து குறைந்து காணப்படுகிறது.

மல்லிகைப் பூ எவ்வளவு விலைக்கு விற்றாலும் அதை வாங்கித் தான் ஆக வேண்டும் என்ற கட்டாயம் கல்யாண வீட்டுக்காரர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மணப்பெண் மல்லிகைப் பூ சூடிக்கொள்ள வேண்டும் என்ற சூழலில் விலை அதிகமாக இருந்தாலும் அதனை திருமண வீட்டுக்காரர்கள் மார்க்கெட்டிற்கே சென்று கிலோ கணக்கில் வாங்கிச் செல்கின்றனர். அதேபோல் காதுகுத்து, பூப்புனித நீராட்டு விழா என பல சுபநிகழ்ச்சிகளுக்கும் மல்லிகை பூ அவசியம் தேவை என்பதால் அதன் விலை குறைய வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

ஆவணி மாதம் முழுவதும் ஏராளமான சுபமுகூர்த்த நாட்கள் வருவதால் மல்லிகை பூவின் விலை குறைய வாய்ப்பே இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து ஐப்பசி, கார்த்திகை மாதங்களிலும் விலை உயர்வாகவே இருக்கும் என்கின்றனர் வியாபாரிகள். தற்போதைய சூழலில் திண்டுக்கல் மார்க்கெட்டில், மல்லிகை பூ கிலோ-1000, முல்லைப்பூ கிலோ-600, கனகாம்பரம் கிலோ-1000, காக்கரட்டான் கிலோ-350, ஜாதிபூ கிலோ -450 விற்பனையாகிறது.

இதேபோல்.. அரளிப்பூ கிலோ- 150, சம்பங்கி கிலோ- 200, பட்டன் ரோஜா கிலோ-120 , பன்னீர் ரோஜா கிலோ-80, செவ்வந்திப் பூ கிலோ-180, செண்டுமல்லி கிலோ-20 விரிச்சிப்பு கிலோ-120 வாடாமல்லி கிலோ-10 கோழிக்கொண்டை-30 ரூபாய்க்கு என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் குறைந்தபட்சமாக வாடாமல்லி கிலோ 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கேரளாவில் ஓணம் பண்டிகை இந்தாண்டு ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக கொண்டாடப்படாது என்பதன் காரணமாக வாடாமல்லி, செண்டு மல்லி உள்ளிட்ட அத்தப்பூ கோலத்துக்கு பயன்படுத்தப்படும் பூக்களின் விலை மட்டும் சற்றே குறைந்துள்ளது..













Click it and Unblock the Notifications