திண்டுக்கல்லில் அசத்திய இஸ்லாமியர்கள்.. இதுதானே எங்கள் தமிழ்நாடு.. சிவன் கோயிலில் முஸ்லிம்கள்! வாவ்
திண்டுக்கல்: திண்டுக்கல் விழாவின் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.. என்ன நடந்தது திண்டுக்கல்லில்..!!
நம்முடைய நாட்டில் இந்துக்கள், இஸ்லாமியர்கள் இரு தரப்புமே சகோதரர்கள் போல ஒன்றாக பாவித்து வருகிறார்கள்.. நம்முடைய தமிழகத்திலும் இந்த சகோதரத்துவம் பல்லாண்டு காலமாக நீடித்தே வருகிறது.

சகோதரத்துவம்: ரம்ஜான், மொகரம், தீபாவளி என 2 மத பண்டிகைகளையும், இங்குள்ள முஸ்லிம்களும், இந்துக்களும் கொண்டாடுவது வழக்கமாக இருந்து வருகிறது.. அதேபோல, அறுவடையாகட்டும், திருமணம், தொழில் எதுவானாலும் சரி, பள்ளிவாசலில் வந்து அனுமதி கேட்டபிறகுதான் அங்குள்ள இந்துக்கள் அவைகளை தொடங்குவார்கள்..
அதேபோல, மொஹரம் பண்டிகை வந்தாலும் சரி, பள்ளிவாசல்கள் திறப்பு விழா என்றாலும் சரி, இந்துக்கள் பள்ளிவாசலுக்கு திரண்டு சென்று சீர்வரிசைகளை தருவார்கள்.. அதுபோல, இந்துக்களின் திருவிழாவுக்கு இஸ்லாமியர்கள் சீர்வரிசைகளை கொண்டுவந்து சிறப்பித்து விடுவார்கள். இதுபோக, கால்நடையாக செல்லும் பக்தர்களுக்கு தண்ணீர், பால், உணவு பொருட்களையும் தந்து வழியனுப்பி வைப்பார்கள்.
நல்லிணக்கம்: இப்படியான மதநல்லிணக்க உணர்வுகள் இரு சமுதாய மக்களிடம் பின்னிப்பிணைந்து வருகிறது.. 4 நாட்களுக்கு முன்புகூட, ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகேயுள்ள மங்களகுடியை அடுத்துள்ளது ஊமைஉடையான்மடை என்ற கிராமம்.. இங்கு இந்துக்களும், இஸ்லாமியர்களும் ஒரே கிராமத்தில், பலவருட காலமாக ஒன்றாகவே வாழ்ந்து வருகிறார்கள்.
இந்த கிராமத்தில் புதிதாக ஒரு பள்ளிவாசல் கட்டப்பட்டு, அதற்கான திறப்பு விழாவும் நடந்தது.. இதற்காக அங்கிருந்த இந்துக்கள், முத்து மாரியம்மன் கோயிலுக்கு சென்று, அங்கிருந்து சீா்வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு, பள்ளிவாசலுக்கு சென்றார்கள்.. அங்கே பள்ளிவாசலில், இந்த சீர்வரிசையை இஸ்லாமியர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்டனர்.
திண்டுக்கல்: இதோ இப்போதும் திண்டுக்கல்லில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.. திண்டுக்கல் நகர் ரவுண்ட் ரோடு புதூரில் சக்தி சந்தான கணேசர் கோயில் அமைந்துள்ளது..
நூற்றாண்டு பழமையான இந்த கோயிலில் முதலில் விநாயகர் மட்டுமே இருந்தார்... இப்போது, இந்த கோயில் புதுப்பிக்கப்பட்டு பரமேஸ்வரி, பரமேஸ்வரர், விஷ்ணு, துர்க்கை, தட்சணாமூர்த்தி, லிங்கோத் பவர், சண்டிகேஸ்வரர், காலபைரவர் ஆகிய தெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு, கடந்த வருடம் கும்பாபிேஷகமும் நடத்தப்பட்டது. இந்த வருடம் வருடாபிேஷகம் நடத்த முடிவு செய்யப்பட்டது.
திருக்கல்யாணம்: இதற்காக, வருடாபிஷேகத்தின் அழைப்பிதழ், கோயில் நிர்வாகத்தின் சார்பில் இஸ்லாமியர்களுக்கும் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று பரமேஸ்வரி பரமேஸ்வரருக்கு திருக்கல்யாணம் நடந்தது.
இதில் இஸ்லாமியர்கள் மணமகள் வீட்டாராக பங்கேற்று சீர்வரிசைகள் கொண்டு வந்தார்கள்.. பெரிய தாம்பூல தட்டுகளில், பூமாலை, வளையல், பட்டுச்சேலை, பழங்கள் உட்பட 21 வகை சீர்வரிசையை ஊர்வலமாக கொண்டுவந்தனர்.. இதை பெற்றுக்கொண்ட இந்துக்கள், சிவாச்சாரியார்களால் திருக்கல்யாணத்தை நடத்தினார்கள்.. ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு தங்களது தாலி கயிறுகளை இந்த நிகழ்வில் மாற்றிக்கொண்டனர். பிறகு திருக்கல்யாண விருந்து அனைவருக்கும் வழங்கப்பட்டது...
பங்கேற்பு: ரவுண்ட் ரோடு புதூர் ஜூம்மா மஜித் பள்ளிவாசல் தலைவர் இஸ்மாயில், செயலாளர் முகமது ரபீக், பொருளாளர் முகமது ஹவுஸ், கவுன்சிலர் முகமது சித்திக் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கடைசிவரை பங்கேற்று சிறப்பித்துவிட்டு போனார்கள்.. மத ஒற்றுமையை வலியுறுத்தும் விதமாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி அனைவரையுமே நெகிழ வைத்தது.
எவ்வளவுதான் இடர்பாடுகளையும், இன, மத ரீதியான பிளவுகளையும், சில குரூரர்கள் கட்டவிழ்த்து விட்டாலும், மனிதாபிமானமும், ஈரம் கசியும் இதயமும் இங்குள்ளவரை, சகிப்புத்தன்மையையும், மத நல்லிணக்கத்தையும், நம்மிடமிருந்து யாராலும் ஒருபோதும் பிரித்து விட முடியாது என்பதைதான் இதுபோன்ற "சகோதர உறவுகள்" நாட்டுக்கு பறைசாற்றி கொண்டிருக்கின்றன...
அன்பு: மத மாற்றங்களை புறந்தள்ளிவிட்டு மனித மனங்களும் ஒன்றுபட்டு கொண்டிருக்கின்றன.. தழைத்தோங்கட்டும் மனித நேயம்..!!! அன்புக்கும் உண்டோ அடைக்குந்தாழ்..!












Click it and Unblock the Notifications