திண்டுக்கல் ஓடும் ரயிலில் நாய் போன்று குரைத்து பயணிகளை கடிக்க பாய்ந்த இளைஞர்.. இறுதியில் ட்விஸ்ட்
திண்டுக்கல்: திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை நோக்கி சென்ற அனந்தபுரி அதிவிரைவு ரெயில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. அந்த ஓடும் ரயிலில் வடமாநில வாலிபர் ஒருவர், திடீரென நாய் போன்று குரைத்து பயணிகளை கடிக்க பாய்ந்தார். இதை சற்றும் எதிர்பார்க்காத பயணிகள்,ரேபிஸ் பாதித்து இருக்கலாம் என பயந்தனர். ரயில்வே போலீசாருக்கு தகவல் தந்தனர். திண்டுக்கல் ரயில் நிலையத்தில் போலீசார் அந்த வாலிபரை மீட்டனர்.
நமது நாட்டில் இப்போது தெருக்களில் சுற்றித்திரியும் நாய்கள், மனிதர்களுக்கு பெரும் தொல்லையாக மாறியிருக்கிறது. தனியாக சிறுவர்கள், முதியவர்கள் நடந்து செல்லவே முடியாத அளவிற்கு இருக்கிறது. கூட்டமாக சுற்றும் தெருநாய்கள் திடீரென ஒருவரை கடித்து குதறும் சம்பவம் அடிக்கடி நடக்கிறது. இதில் ரேபிஸ் (வெறிநோய்) பாதித்த நாய்கள் கடித்தால், மனிதர்களுக்கும் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு, உயிருக்கே ஆபத்தாகின்றன.

அண்மையில் கூட ஒருவர் வளர்ப்பு நாய் கடித்து ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். அதேபோல் பல்வேறு பகுதிகளில் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பயந்து போய் இருக்கிறார்கள். இந்நிலையில் திண்டுக்கல்லில் ஓடும் ரயிலில் ஒரு இளைஞர் நாய் போன்று குரைத்து, பயணிகளை கடிக்க பாய்ந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவனந்தபுரத்தில் இருந்து சென்னை வரும் அனந்தபுரி அதிவிரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் அருகே வந்து கொண்டிருந்தது. அந்த ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. இதில் ரயிலின் பின் பகுதியில் இருந்த முன் பதிவு இல்லாத ஒரு பெட்டியில் ஏராளமான பயணிகளுடன், பீகாரை சேர்ந்த 4 வாலிபர்களும் பயணித்துள்ளார்கள்.
அதில் ஒரு பீகார் வாலிபர் திடீரென நாய் போன்று குரைக்க தொடங்கியிருக்கிறார். அதை கேட்டு திடுக்கிட்டு சக பயணிகள் என்னவோ, ஏதோ என்று அவரை பார்த்தனர். உடனே இளைஞருடன் வந்த 3 பேரும், அவரை அமைதிப்படுத்த முயற்சித்துள்ளார்கள். ஆனால் அந்த வாலிபரோ தொடர்ந்து நாய் போன்று குரைத்ததோடு, எதிரே இருந்த பிற பயணிகள் மீது கடிக்கப் பாய்ந்தார். அதை பார்த்த பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.
அவருக்கு ரேபிஸ் நோய் பாதிப்பு இருக்கலாம் என்றும், அவர் கடித்தால் தங்களுக்கும் ரேபிஸ் தாக்கி விடும் என்றும் பயந்து அருகில் இருந்த பயணிகள் எழுந்து ஓடினார்கள். அதன் பின்னரும் அந்த வாலிபர் ஆக்ரோஷமாக சத்தமிட்டபடி இருந்ததால் பெட்டி முழுவதும் பயணிகள் பயந்துபோனார்கள்.
ஒரு கட்டத்தில் பயணிகள் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் அந்த ரெயில் இரவு 10.45 மணிக்கு திண்டுக்கல் ரயில் நிலையத்துக்கு வந்தது. இதைத் தொடர்ந்து ரயில்வே போலீசார், ரயில்வே பாதுகாப்பு படையினர் விரைந்து வந்து, அந்த இளைஞரை ரயிலில் இருந்து கீழே இறக்கினர்.அப்போதும் அந்த வாலிபர் ஆவேசமாகவே இருந்தார். அவர் யாரையும் கடித்து விடாமல் தடுக்க அவருடைய முகம், கை மற்றும் கால்களை துணியால் கட்டிய போலீசார், பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது.
அதில் அவருடைய உடலில் நாய், குரங்கு உள்ளிட்ட எந்த விலங்கும் கடித்த காயம் மற்றும் ரேபிஸ் அறிகுறி எதுவும் கிடையாது. அதேநேரம் அவர் போதையில் இருந்தது தெரியவந்தது. எனவே போதை வெறியில் அவர் நாய் போன்று குரைத்து, கடிக்க பாய்ந்து இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். இதுதொடர்பாக திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் திண்டுக்கல்லில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.












Click it and Unblock the Notifications