அப்படியே தலையில் விழுந்த மேற்கூரை.. அலறித் துடித்த பிஞ்சுகள்! பதறிப் போன பெற்றோர்! திண்டுக்கல் ஷாக்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பாரதிபுரம் சந்தை ரோடு பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் மேற்கூரை கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்து ஏழு மாணவர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தரமின்றி கட்டிடம் கட்டியதே விபத்துக்கு காரணம் என திண்டுக்கல் எம்.எல்.ஏ சீனிவாசன் புகார் கூறியுள்ளார். மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
திண்டுக்கல் பாரதிபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் 400க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இங்கு எல்கேஜி முதல் எட்டாம் வகுப்பு வரை வகுப்புகள் செயல்பட்டு வருகிறது.

கடந்த 1923ல் ஆரம்பிக்கப்பட்ட இந்த பள்ளி நூற்றாண்டு விழா கொண்டாடப்பட உள்ள நிலையில் பள்ளியில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நான்காம் வகுப்பு பாடப் பிரிவு வகுப்பு அறையில் கான்கிரீட் பூச்சு பெயர்ந்து விழுந்தது.
இதில் நான்காம் வகுப்பு மாணவர்கள் முகமது சகீல், ஆண்டோ, கவுதம், அகிலேஷ், தருண், அஜய் உள்ளிட்ட. 7 பேர் காயம் அடைந்தனர். இதை அடுத்து சம்பவ இடத்திலிருந்து வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்த பெற்றோர் காயமடைந்த குழந்தைகளை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அங்கு மாணவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து விபத்து நடந்த இடத்தில் வருவாய் துறை மற்றும் மாநகராட்சி துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, விபத்து நடந்த பள்ளியில் அதிமுக முன்னாள் அமைச்சரும், திண்டுக்கல் சட்டமன்ற உறுப்பினருமான திண்டுக்கல் சீனிவாசன் பார்வையிட்டார்.
பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்," திண்டுக்கல் மாநகராட்சியில் பாரதிபுரம் சந்தை ரோடிலுள்ள மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ரூ.1 கோடிக்கு புனரமைக்கும் பணி நடைபெற்று உள்ளது. இதில், 4ஆம் வகுப்பு கட்டிடத்தின் சாரை இடிந்து விழுந்து 7 குழந்தைகள் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒப்பந்ததாரர்கள் சரியாக கட்டிடங்கள் கட்டுவதில்லை. கவனம் செலுத்தாமல் லாப நோக்குடன் கட்டியதால் இந்த விபத்து நடந்துள்ளது.

பள்ளிக்கூடம் விடும் நேரம் என்பதால் உயிர் பலி ஏற்படாமல் உள்ளது. இந்த சம்பவத்திற்கு காரணமான ஒப்பந்ததாரர்கள், அதிகாரிகள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோளை வைக்கிறேன். குழந்தைகளை மருத்துவமனையில் பார்த்துவிட்டு அவர்களுக்கு என்ன உதவி வேண்டும் என செய்ய வேண்டும். யார் உயிர் போனாலும் நமது பிள்ளைகள்.
கட்டிடங்கள் கட்டுவதிலும், சாலைகள் அமைப்பதிலும் தரமான பணிகள் இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம். எல்லாவற்றிலும் கமிஷன், கரப்சன், கலெக்சன் என பார்க்கின்ற அரசாங்கம் இருப்பதால் இந்த தவறு நடந்துள்ளது. பெரிய நடவடிக்கை உரிய நடவடிக்கை கட்டடம் கட்டியவர் மீது எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்" என தெரிவித்தார்.

இந்நிலையில், விபத்தால் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளை சந்தித்து அமைச்சர் ஐ.பெரியசாமி ஆறுதல் தெரிவித்தார். தொடர்ந்து மருத்துவரிடம் சிகிச்சை குறித்து கேட்டிருந்தவர் பெற்றோர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications