தமிழ்நாட்டுக்கே சந்தை.. ஒட்டன்சத்திரத்தில் கூட தக்காளி இந்த ரேட் இல்லை.. திண்டுக்கல் மொத்தமும் ஹேப்பி
திண்டுக்கல்: யாரு சாமி இவரு.. இப்படி அள்ளி வீசுறாரு என்று திண்டுக்கலே ஒரு வியாபாரியின் செயலை பார்த்து திகைத்து போய்விட்டது ஊரெல்லாம் தக்காளி விலை 120 ரூபாய்க்கு விற்கும் போது, இவருக்கு மட்டும் வித்தியாசமான ஆசை.. மொத்தமாக தக்காளியை இறக்கி ஒரு கிலோ தக்காளியை 60 ரூபாய்க்கு கொடுத்து ஆச்சர்யப்படுத்தி உள்ளார்.
கோடைக்காலத்தில் தக்காளியை தாக்கிய சில நோய்களால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. முன்னதாக தக்காளி பயிரிட்ட விவசாயிகள் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காத காரணத்தால் பயிரிடுவதையும் மக்கள் குறைத்துவிட்டனர். இது ஒருபுறம் எனில் ஜூன் மாதம் சரியான நேரத்தில் தென்மேற்கு பருவ மழை பெய்யாதது, அப்போது ஏற்பட்ட கால நிலை மாற்றம் போன்றவற்றால் காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டது. குறிப்பாக தக்காளி, சின்ன வெங்காயம் (சாம்பார் வெங்காயம்) விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டது.

தக்காளி விலை கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே 100 ரூபாய்க்கு கீழ் இறங்கவே இல்லை. ஒரு கிலா 140 ரூபாய் என்கிற அளவில் சென்னை கோயம்பேட்டில் விற்கப்படுகிறது. தக்காளி அதிகம் பயிரிடப்படும் திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சராசரியாக 120 முதல் 160 ரூபாய் வரை தமிழகத்தில் தக்காளி விலை உயர்ந்து காணப்படுகிறது.
தலை சுற்ற வைக்கும் விலை உயர்வால் சமையலில் தக்காளி பயன்பாட்டை பெரிய அளவில் மக்கள் குறைத்துவிட்டனர். பல வீடுகளில் தக்காளி சட்னி கேட்டால் சண்டை தான் கிடைக்கும். சாம்பாரில் கூட தக்காளியை பெயருக்கு சேர்க்கும் நிலை வந்துவிட்டது. ஒரு கிலோ வாங்கி அதனை இரண்டு நாள் பயன்படுத்திய மக்கள், ஒரு கிலோ தக்காளி வாங்கி அதனை ஒரு வாரம் வரை பயன்படுத்தும் நிலைக்கு வந்துவிட்டார்கள்.ஆனாலும் தக்காளி விலை குறையவில்லை.
இதனால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்தை உணர்ந்த தமிழக அரசு கூட்டுறவுத்துறை, தோட்டக்கலைத்துறை மூலம் குறைந்த விலைக்கு தக்காளி விற்கப்படுகிறது. ஆனாலும் தக்காளி போதிய அளவு மக்களுக்கு குறைந்த விலையில் கிடைக்கவில்லை.இதனால் தக்காளி விலை எப்போது குறையுமோ? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்த நிலையில் திண்டுக்கல் காந்தி மார்க்கெட் தக்காளி வியாபாரி சந்தோஷ் முத்து வெளியிட்ட மிகப்பெரிய அறிவிப்பு, அந்த ஊர் மக்கள் முழுவதையும் மார்க்கெட்டுக்கு படை எடுக்க வைத்துள்ளது.
பொதுமக்களின் நலன்கருதி ஒருநாள் மட்டும் தனது கடையில் ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்கப்படும் என்று சந்தோஷ் முத்து சந்தோஷசமாக அள்ளி வழங்க, அடித்து பிடித்து ஓடி வந்து வாங்கி இருக்கிறது மக்கள் கூட்டம். ஒரு கிலோ திண்டுக்கல் மார்க்கெட்டில் ரூ.120-க்கு விற்கும் நிலையில் பாதி விலையான ரூ.60-க்கு தக்காளி விற்கப்பட்டதால் மக்கள் கூட்டம் அலைமோதியது.
வந்த ஒவ்வாரு நபருக்கும் தலா 2 கிலோ தக்காளி வழங்கினார். அதற்கு மேல் யாருக்கும் அவர் வழங்கவில்லை. ஒரு கிலோ தக்காளியை 60 ரூபாய்க்கு விற்ற வியாபாரி சந்தோஷ் முத்துவை பலரும் பாராட்டினார்கள். சந்தோஷ் முத்து ஆந்திராவில் இருந்து மொத்தம் 5½ டன் தக்காளி கொள்முதல் செய்து ஒரு கிலோ தக்காளியை 60 ரூபாய் என்கிற விலையில் விற்றுள்ளார்.
5500 கிலோ தக்காளியும் சில மணி நேரத்திலேயே விற்று தீர்ந்துவிட்டது. இதன் காரணமாக திண்டுக்கல் மக்களுக்கு இன்னும் இரண்டு வாரத்திற்கு தக்காளி பிரச்சனை இருக்காது. மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்த்த வியாபாரி சந்தோஷ முத்துவின் செயல் வியப்புக்குரியது.












Click it and Unblock the Notifications