பங்காளியாக மாறிய திமுக – அதிமுக .. விஜய்க்கு அடி மேல் அடி.. தாக்கு பிடிப்பாரா?
திண்டுக்கல்: சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு குறுகிய காலமே உள்ளது. ஆட்சியை தக்க வைப்பதற்கு திமுக கூட்டணியும், ஆட்சியை பிடிப்பதற்கு அதிமுக - பாஜக கூட்டணியும் தீவிரம் காட்டி வருகிறார்கள். நாம் தமிழர், தவெக கட்சிகளும் களம் காண்பதால் 4 முனை போட்டி நிலவி வருகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு நேற்று வெளியில் வந்த தவெக தலைவர் விஜய், திமுக, அதிமுக குறித்து கடுமையாக விமர்சித்தார். பாஜகவையும் மறைமுகமாக விமர்சித்தார். இதற்கு அதிமுக தரப்பில் கடுமையாக எதிர்வினையாற்றி வருகிறார்கள். எதிரிக்கு எதிரி நண்பன் என்கிற பாணியில் இதை திமுக தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி காய் நகர்த்துகிறது. அதிமுகவின் அறிக்கையை மேற்கோள் காட்டி அமைச்சர் பெரியசாமி விஜய்யை விமர்சித்துள்ளார்.
தமிழ்நாடு அரசியல் கட்சிகள் சட்டமன்ற தேர்தலுக்கு தயாராகி வருகிறார்கள். பிரச்சாரம், தொகுதி பங்கீடு, வாக்குறுதிகள் ஆகியவற்றால் களம் பரபரப்பாகியுள்ளது. தவெக தலைவர் விஜய் நேற்று திமுக, அதிமுக, பாஜக மூன்று கட்சிகளையும் விமர்சித்தார். இதற்கு 2 கூட்டணிகளிலும் இருந்து எதிர் வினையாற்றி வருகிறார்கள். விஜய்யை சாஃப்ட் கார்னராக டீல் செய்து வந்த அதிமுகவினரும் விஜய்யை கடுமையாக விமர்சிக்க தொடங்கியுள்ளனர்.

அட்டாக் விஜய்
விஜய் படத்திற்கு பிளாக் டிக்கெட் விற்கப்படுவது குறித்து அதிமுக விமர்சித்திருந்தது. விஜய் வாயில் வடை சுடுகிறார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். விஜய்க்கு தன் கட்சியில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியிருந்தார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், முதலில் விஜய்யை வெளியே வர சொல்லுங்கள். ஊடகங்களை சந்திக்க சொல்லுங்கள். எங்களிடம் உரச வேண்டாம். நாங்கள் வெகுண்டு எழுந்தால் தவறாகிவிடும் என்று எச்சரித்துள்ளார். விஜய்யை பாராட்டி பேசிய தினகரன் உள்ளிட்டோரும் அவரை விமர்சிக்க தொடங்கியுள்ளனர். இதை திமுகவும் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்த தொடங்கியுள்ளது.
அதிமுகவின் அறிக்கை மேற்கோள்காட்டி
அமைச்சர் ஐ. பெரியசாமி திண்டுக்கலில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "விஜய் படத்திற்கு பிளாக்கில் டிக்கெட் விற்கப்படுகிறது என்று அதிமுக நேற்று விமர்சித்துள்ளார்களே. விஜய்யின் புகாருக்கு அதிமுக பதில் அறிக்கை கொடுத்துள்ளார்கள். அதை படித்தீர்களா. அரசு ஒரு டிக்கெட் ரூ.5க்கு நிர்ணயம் செய்தால் டிக்கெட் 200, 300 ரூபாய்க்கு விற்கிறார்களே. உன் தொழிலிலேயே நீ தவறு செய்கிறாய்.
மக்களுக்கு எப்படி நல்லது செய்ய முடியும் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளனர். அதிமுகவின் கேள்விக்கு விஜய்யை பதில் சொல்ல சொல்லுங்கள். அதிமுக கேள்விக்கு அவர் பதில் சொல்லட்டும். பிறகு நாங்கள் கருத்து சொல்கிறோம்" என்றார். ஒரே நேரத்தில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி விஜய்யை ரவுண்டு கட்டுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாஸ்டர் பிளான்
பொதுவாக தமிழ்நாட்டில் மூன்றாவது கட்சி உருவாக திமுக, அதிமுக அனுமதிக்காது. மறைமுகமாக கூட்டணி சேர்ந்து டம்மியாக்கிவிடுவார்கள் என்கிற கருத்து நிலவி வருகிறது. விஜய் விஷயத்திலும் அப்படி நடந்தால் அது அவருக்கு பெரிய நெருக்கடியாக மாறும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறியுள்ளனர். வரும் நாட்களில் இரண்டு கட்சிகளும் எப்படி பயணிக்க போகின்றன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications