ஐ பெரியசாமி வீட்டு முன் குவிந்த திமுகவினர்.. திடீரென தர்ணா.. அமலாக்கத்துறை ரெய்டுக்கு எதிர்ப்பு
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் உள்ள அமைச்சர் ஐ பெரியசாமி வீட்டில் இன்று காலை 6 மணியில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அவரது வீட்டின் முன்பு குவிந்துள்ள திமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத்துறையை கண்டித்து திமுகவினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், வீட்டின் பிற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டை சுற்றி துப்பாக்கியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமியின் இல்லத்தில் இன்று காலையில் இருந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள். திண்டுக்கல்லில் உள்ள அவரது இல்லத்தில் இன்று காலை 6 மணி முதல் சிஆர்பிஎஃப் வீரர்கள் பாதுகாப்புடன் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் அமைச்சரின் வீட்டில் சோதனை நடைபெறும் தகவலை கேட்டு ஏராளமான திமுகவினர் அமைச்சர் வீட்டு முன்பு குவிந்து வருகின்றனர். திண்டுக்கல் மட்டுமல்லாது திண்டுக்கல் மாவட்டம் முழுவதிலும் இருந்து அவரது ஆதரவாளர்கள் அவரது வீட்டை நோக்கி படையெடுத்து வந்த வண்ணம் உள்ளனர். சில நிமிடங்களிலேயே திமுக தொண்டர்களின் எண்ணிக்கை அதிகமானது.
மேலும் தொண்டர்கள் அங்கு குவிந்து வருவதால் வீட்டின் பிற பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் வீட்டை சுற்றி துப்பாக்கியுடன் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. அமலாக்கத்துறை அதிகாரிகளை கண்டித்து திமுகவினர் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications