அப்படியே துணை மேயர் பதவியும் கொடுத்தா..? திடீர் கோரிக்கை வைக்கும் தோழர்கள்.. தர்மசங்கடத்தில் திமுக.!
திண்டுக்கல் : நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் கூட்டணி வைத்து மூன்று சீட்டுகளை பெற்ற கம்யூனிஸ்ட் கட்சியினர், திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் பதவி கேட்டு பெரும் முயற்சியில் இறங்கியுள்ளதால் திமுக தர்மசங்கடத்தில் ஆழ்ந்துள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 19ஆம் தேதி நிறைவடைந்த நிலையில் நேற்று தமிழகம் முழுவதும் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் உள்ள இருபத்தி ஒரு மாநகராட்சிகளையும் பெரும்பாலான நகராட்சி பேரூராட்சிகளில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளே கைப்பற்றின.
அவர் நிச்சயம் துணை மேயர் இல்லையாம்.. சமூக நீதி காக்குமா“திமுக”..அடித்து சொல்லும் கழக உடன்பிறப்புகள்!
திண்டுக்கல் மாநகராட்சி
திண்டுக்கல் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 48 வார்டுகளில் திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் 37 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன . குறிப்பாக மாநகராட்சியை கைப்பற்ற தேவையான 25இடங்களுக்கும் 5 இடங்கள் கூடுதலாக அதாவது 30 வார்டுகளில் திமுக தனித்தே வென்றுள்ளது. திமுக 30 இடங்களிலும், கூட்டணி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும், இந்திய காங்கிரஸ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. இதேபோல் இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி , விடுதலை சிறுத்தைகள் கட்சி தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
மேயர் பதவி
திண்டுக்கல் மாநகராட்சி மட்டுமல்லாது பழனி கொடைக்கானல் ஒட்டன்சத்திரம் நகராட்சிகளையும் இருபத்திமூன்று பேரூராட்சிகளில் பெரும்பாலான வார்டுகளை திமுக கைப்பற்றியது. மார்ச் 2-ஆம் தேதி கவுன்சிலர்கள் பதவி ஏற்புக்கு பிறகு மார்ச் 4ஆம் தேதி திண்டுக்கல் மாநகராட்சியில் மேயர் துணை மேயர் தேர்தல் நகராட்சி பேரூராட்சிகளில் தலைவர் துணைத் தலைவர் தேர்தல் நடைபெற உள்ளது. எப்படியாவது மேயர் துணை மேயர் பதவிகளை கைப்பற்றி விட வேண்டும் என வார்டு உறுப்பினர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் நினைத்து வருகின்றனர்.
கம்யூ. கட்சி கோரிக்கை
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் மூத்த அமைச்சரான ஐ.பெரியசாமி மேயர் துணை மேயர் நகராட்சித் தலைவர் பட்டியலை கட்சித் தலைமையிடம் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. திண்டுக்கல் மேயர் மற்றும் பழனி, கொடைக்கானல், ஒட்டன்சத்திரம் நகராட்சி தலைவர் பதவிகள் திமுகவினருக்கு தான் கிடைக்கும் என்பது அனைவருக்கும் தெரிந்த நிலையில் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்கு சில இடங்களில் துணைத் தலைவர் பதவிகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கட்சித் தலைமைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தீவிர முயற்சி
திண்டுக்கல் மாநகராட்சி துணை மேயர் பதவியை மார்க்சிஸ்ட் கட்சி திமுக தலைமையிடம் கேட்க முடிவு செய்து அதற்கான முயற்சியில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த முறை திண்டுக்கல் நகராட்சியாக இருந்த போது துணைத் தலைவர் பதவியை மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கல்யாணசுந்தரம் வகித்தார். இந்த முறை சட்டப்பேரவைத் தேர்தலில் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோல்வியடைந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளாட்சியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவரை பதவியில் அமர்த்த வேண்டும் என அந்தக் கட்சியின் தலைமை முயற்சி மேற்கொண்டு வருகிறது.
தர்மசங்கடத்தில் தலைமை
தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த மாரியம்மாள், கணேசன், ஜோதிபாசு ஆகிய மூவர் வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை யாராவது ஒருவருக்கு துணை மேயர் பதவியை அளிக்க வேண்டுமென திமுக தலைமையிடம் அக்கட்சி வலியுறுத்தி உள்ளதாக தெரிகிறது. அப்படி இல்லை என்றால் பழனி நகராட்சி துணைத் தலைவர் பதவியையாவது தங்களுக்கு ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல் மாநகராட்சி மற்றும் மற்ற நகராட்சிகளில் தனித்தே பெரும்பான்மை பெற்றுள்ள போதிலும் கூட்டணி தர்மத்தின் அடிப்படையில் தங்களுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என கூட்டணிக் கட்சியினர் வலியுறுத்தி வருவதால் திண்டுக்கல் திமுக தலைமை தர்மசங்கடத்தில் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.