லஞ்சத்துடன் சிக்கிய ED அதிகாரி-15 மணிநேரம் தீவிர விசாரணை- 15 நாட்கள் ஜெயிலில் அடைக்க கோர்ட் உத்தரவு!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபுவிடம் ரூ31 லட்சம் லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கி கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி 15 மணிநேர விசாரணைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதனையடுத்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க திண்டுக்கல் நீதிமன்றம் உத்தரவிட்டது.
திண்டுக்கல் மாவட்ட அரசு மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிபவர் டாக்டர் சுரேஷ் பாபு. இவர் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. இந்த வழக்கு விசாரணையும் முடிவடைந்தது. ஆனால் மீண்டும் அமலாக்கத்துறை வழக்கை எடுக்காமல் இருக்க டாக்டர் சுரேஷ் பாபுவிடம் ரூ1 கோடி லஞ்சம் கேட்டுள்ளார் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி.

இதனால் அச்சப்பட்ட டாக்டர் சுரேஷ் ஏற்கனவே ரூ20 லட்சம் லஞ்சம் கொடுத்துள்ளார். ஆனால் உயர் அதிகாரிகளுக்கும் லஞ்சம் தர வேண்டும் என்பதால் மேலும் ரூ51 லட்சம் லஞ்சம் கேட்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் தெரிவித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் ரசாயனம் தடவிய ரூ31 லட்சம் ரூபாய், அங்கித் திவாரியிடம் டாக்டர் சுரேஷ்பாபுவால் கொடுக்கப்பட்டது. இந்த லஞ்சப் பணத்தைப் பெற்றுக் கொண்ட உடனேயே சம்பவ இடத்தில் இருந்து தப்பி ஓடிவிட்டார் அங்கித் திவாரி. அவரை விரட்டிச் சென்ற திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசார், மதுரை- திண்டுக்கல் நெடுஞ்சாலையில் வழிமறித்து கைது செய்தனர். அவரிடம் லஞ்சப் பணம் ரூ31 லட்சமும் மொத்தமாக கைப்பற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து அங்கித் திவாரியின் கூட்டாளிகள் யார்? அங்கித் திவாரி யாருக்கு எல்லாம் லஞ்சப் பணத்தை பங்கிட்டுக் கொடுத்தார் என சுமார் 15 மணிநேரம் லஞ்ச ஒழிப்புப் போலீசார் துருவி துருவி விசாரணை நடத்தினர். மேலும் மதுரையில் உள்ள அங்கித் திவாரி வீடு, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் ஆகியவற்றிலும் தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்த பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே 15 மணிநேர விசாரணைக்குப் பின்னர் அங்கித் திவாரி, திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அங்கித் திவாரியை 15 நாட்கள் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இருப்பினும் அங்கித் திவாரியின் கூட்டாளிகளான அமலாக்கத்துறை உயர் அதிகாரிகள் யார் யார் என்கிற விவரத்தை அறிவதற்காக லஞ்ச ஒழிப்பு போலீசார் காவலில் எடுத்து விசாரிக்கவும் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்தியாவிலேயே முதல் முறையாக அமலாக்கத்துறை அலுவலகத்துக்குள் நுழைந்து தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு போலீசார் பல மணிநேரம் அதிரடி சோதனை நடத்தியதும் அமலாக்கத்துறை அதிகாரியை சுற்றி வளைத்து கைது செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications