கிடாகறி விருந்து.. மலை போல குவிந்த மட்டன் சோறு.. திண்டுக்கல்லில் ஆண்கள் மட்டுமே பங்கேற்ற திருவிழா
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெற்ற கோயில் விழா ஒன்று, இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடந்த இந்த விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தும் உள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் அய்யம்பாளையத்தில் உள்ளது சடையாண்டி கோயில்.. மருதாநதி ஆற்றின் கரையோரத்திலேயே இந்த கோயில் அமைந்துள்ளது.. கிட்டத்தட்ட 1,000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலில், வருடா வருடம் திருவிழா வெகுசிறப்பாக நடைபெறும்.. சடையாண்டிசாமியை இந்த ஊரின் காவல் தெய்வமாக மக்கள் போற்றி வழிபட்டு வருகிறார்கள்.

விவசாயம்: முழுக்க முழுக்க ஆண்கள் மட்டுமே பங்கேற்கும் இந்த விழாவானது, நள்ளிரவு சிறப்பு பூஜைகளுடன் ஆரம்பமாகும். விவசாயம் செழிக்க வேண்டும் என்றும், வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றும், சடையாண்டி சுவாமி கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கமாகும்.
அந்தவகையில், இந்த வருடத்துக்கான திருவிழாவும் நேற்று நடந்தது.. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்ட நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அய்யம்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் கலந்து கொண்டனர்.
மேளதாளம்: இந்த விழாவையொட்டி, பெரியமுத்தாலம்மன் கோயிலிலிருந்து மேளதாளம் முழங்க முக்கிய வீதி வழியாக மருதாநதி ஆற்றின் கரையில் உள்ள சடையாண்டி கோவிலுக்கு சாமி பெட்டி எடுத்து வரப்பட்டது.
அதன்பின்னர் சாமி பெட்டிக்கு பல்வேறு அபிஷேகம் நடத்தப்பட்டது. பிறகு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்காக 100க்கும் மேற்பட்ட கிடாக்களை கொண்டுவந்திருந்தனர்.. 200 மூட்டை அரிசிச்சோறு வடிக்கப்பட்டது.. 100-க்கும் மேற்பட்ட கிடாக்கள் சுத்தம் செய்து, கமகம கறி விருந்து சமைக்கப்பட்டது... நள்ளிரவில் சிறப்பு பூஜைகள் நடந்து முடிந்த நிலையில், விழாவில் அனைவருக்குமே விடிய, விடிய கறிவிருந்து பரிமாறப்பட்டது...
சடையாண்டி தாடி: இந்த சடையாண்டி தெய்வம் கேட்ட வரம் எல்லாம் தரும் சக்தி உண்டு என்று கிராமமக்கள் சொல்கிறார்கள்.. இந்த சடையாண்டி தெய்வத்தை தாடி சடையாண்டி என்றும் சொலகிறார்கள்..
அதுமட்டுமல்ல, அய்யம்பாளையத்தை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. இதனால் விவசாயம் செழிக்கவும், மும்மாரி மழை பெய்யவும், நோய் நொடியின்றி மக்கள் வாழவும் இந்த திருவிழா ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறதாம்..
சிறப்புகள்: காவல் தெய்வமான சடையாண்டி கோவிலில் திருவிழா முடிந்தவுடன், அய்யம்பாளையம் பெரிய முத்தாலம்மன் கோவில் திருவிழாவுக்கு சாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடத்துவது ஐதீகமாக உள்ளது.. அதன்படி பெரியமுத்தாலம்மன் கோவிலில் சாமசாமி சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.












Click it and Unblock the Notifications