இம்புட்டு மழை பெஞ்சும் ஆத்தூர் டேமும் நிறையலை... குடகனாற்றில் சொட்டு நீரும் ஓடலையே!
திண்டுக்கல்: கொடைக்கானல் மலைகளையே அதிரவைக்கும் அளவுக்கு கனமழை பெய்தும் அந்த மலை அடிவாரம் தொடங்கி கரூர் மாவட்ட எல்லைவரையில் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் வேளாண்மைக்கு நீர் இல்லாமல் அதிர்ந்து போயுள்ளனர். இவ்வளவு மழை பெய்தும் இந்த மலையில் உற்பத்தியாகும் குடகனாற்றில் சொட்டு நீரும் ஓடாமல் இருப்பதன் பின்னணிதான் அதிர வைக்கிறது.
கொடைக்கானல் மலைகளில் தாண்டிக்குடி, பன்றிமலைப் பகுதிகளில் இருந்து உற்பத்தியாகிறது குடகனாறு. ஆதிநாள் முதல் ஆங்கிலேயர் காலம் தொட்டு குடகனாறு நதிநீர் என்பது விவசாய பயன்பாட்டுக்குதான் முன்னுரிமை என்பதாக இருந்து வந்துள்ளது.
ஆங்கிலேயர் காலத்தில் குடகனாறு ஆற்று நீரை முதலில் விவசாயத்துக்கும் பின்னர்தான் குடிநீருக்கும் பயன்படுத்த வேண்டும் என வழங்கப்பட்ட செம்பு பட்டயங்களை இன்னமும் ஆத்தூர் சுற்றுவட்டார விவசாயிகள் வைத்திருக்கின்றனர். குடகனாறு ஒரு நதி மட்டுமல்ல.. பழனிமலையில் உற்பத்தியாகும் பல ஆறுகளும் வேடசந்தூர் வழியில் குடனகாற்றில் கலந்து கரூர் அருகே காவிரியுடன் சங்கமிக்கிறது.
காய்ந்த குடகனாறு
குடகனாற்றின் நீர்வழிப் பாதை என்பது முழுவதும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய பகுதிகள்தான். அப்படியான நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைகளில் கனமழை பெய்கிறது. குடகனாறு தொடங்கும் இடத்தில் நீர் பெருக்கெடுத்தோடுகிறது. ஆனால் அதன் பின் பகுதியில் குடகனாறு மட்டும் எப்போதுமே காய்ந்து கிடக்கிறது. இப்போதைய கனமழைக்கும் கூட பாசிபடிந்த சாக்கடை நீர்தான் வேடசந்தூர் குடகனாற்றில் இருக்கிறது.
ஆத்தூர் அணையில் இருந்து சிக்கல்
குடகனாற்றின் வழித்தடத்தில் சொட்டு நீரும் இப்போது இல்லை. வெறும் மணல் கொள்ளை மட்டுமே காரணம் என்பதெல்லாம் குடகனாற்று விவகாரத்தில் சொல்லிவிட்டு ஒதுங்க முடியாது. பிரச்சனை என்பதே குடகனாற்றை அதன் முகத்துவார பகுதியிலேயே இடை மறித்து கட்டப்பட்ட ஆத்தூர் அணையில் இருந்துதான் தொடங்குகிறது என்கின்றனர் விவசாயிகள்.
வெள்ளம் புரண்டோடிய குடகனாறு
அன்று அணை கட்டப்பட்டபோது கூட அணைக்கான நீர்வரத்து வாய்க்கால்களில் பிரச்சனை இல்லை. இதனால் அணை நிரம்பி அதன் நீர் குடகனாற்றில் வெள்ளமாக கரைபுரண்டோடிய வரலாறும் உண்டு. ஒரு மிகப் பெரும் மழை பெய்தாலே குடகனாறு கரை புரண்டோடிக்கொண்டிருந்தது.
திண்டுக்கல் வாட்டர் டேங்க்
குடகனாற்றில் கட்டப்பட்ட அழகாபுரி அணை பராமரிப்பில் பல்வேறு பிரச்சனைகள் இருந்த போதும் கூட அதும் ஓரளவுக்கு நீரை தக்க வைத்துக் கொண்டிருந்தது. காலப் போக்கில் திண்டுக்கல் நகரின் குடிநீர் தேவைக்கான பிரதான வாட்டர் டேங்க் ' என்கிற அளவுக்கு சென்றுவிட்டது ஆத்தூர் அணை. கடந்த பல ஆண்டுகளாக மழையும் பொய்த்து போனதால் குடகனாற்றுக்கு தண்ணீர் செல்ல வேண்டும் என்கிற சிந்தனையும் ஆத்தூர் அணையை நிரப்புவதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. திண்டுக்கல் நகரின் குடிநீருக்காக மட்டுமே பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்படியும் ஒரு காரணம்
இந்த சோகம் ஒருபக்கம் இருக்க ஆத்தூர் அணைக்கு வரவேண்டிய, காலம் காலமாக இருந்து வரும் இயற்கையான நீர்வழிப் பாதைகளை வேறொரு பகுதியினர் ஆக்கிரமித்து குடகனாற்று நீரை திசை திருப்பியும் கொண்டிருக்கின்றனர். இதனால் இவ்வளவு மழை பெய்தும் ஆத்தூர் அணையும் நிரம்பவில்லை; குடகனாறும் தன் தாய் மலை தந்த நீரைப் பெறவும் வழியில்லாமல் போனது.
குடகனாறு காக்க போராட்டம்
அண்மையில் ஆத்தூர் ஒன்றியத்தில் 15 கிராம சபை கூட்டங்களில் இந்த விவகாரத்தை விவசாயிகள் எழுப்பினர். அத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தையும் நடத்தி உள்ளனர். ஆனாலும் இன்னமும் பிரச்சனை தீர்ந்தபாடில்லை. குடகனாறு உரிமை மீட்புக்காக சமூக வலைதளங்களில் பல்வேறு வகைகளில் குரல்களை அந்த பகுதி இளைஞர்கள் எழுப்பியும் வருகின்றனர்.
எதிர் திசையில் வரும் காவிரி நீர்
இதில் பெரும் கொடுமை என்னவென்றால் ஆத்தூர் அணைக்கு வர வேண்டிய அணை நீர் திசை திருப்பப்பட்டு எங்கோ போக ஆத்தூர் அணையை நம்பியிருக்கிற கிராம மக்கள் குடிநீருக்காக 100 கி.மீக்கு அப்பால் இருக்கிற காவிரி நீரை நம்ப வேண்டிய நிலைமையும் உள்ளது. அதாவது கொடைக்கானல், பழனி மலைகளில் இருந்து உற்பத்தியாகி பல இடங்களில் குடகனாற்றுடன் கலந்து காவிரியில் சங்கமித்த காலம் போய் அதே வழித்தடத்தில் காவிரி நீர் இப்போது எதிர் திசையில் குடிநீருக்காக பயணிக்கிற அவலம் உருவாகி இருக்கிறது.
மலைகளில் இருந்து இறங்கி பெருவெள்ளமாய் புறப்படும் குடகனாறு ஆத்தூர் அணைக்கு போய் சேருமா?
அணை தாண்டி அது தவழ்ந்து ஓடி காவிரி தாயிடம் சங்கமிக்கும் காலம் வருமா?
அப்படி பூரிப்போடு பாய்ந்தோடும் தடமெல்லாம் வெள்ளாமைதான் செழிக்குமா?
விழிபிதுங்கி எதிர்பார்த்து காத்து நிற்கின்றனர் திண்டுக்கல், கரூர் லோக்சபா தொகுதிகளின் விவசாயிகள்!