வேடசந்தூரில் ஒரு வேங்கை வயல்.. குடிநீர் தொட்டியில் மனித மலம்! சரக்கு, பீடி வேற! நடவடிக்கை பாயுமா?
திண்டுக்கல்: புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் குடிக்கும் நீரில் மலத்தை கலந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அதேபோன்ற ஒரு சம்பவம் திண்டுக்கல் அருகே அரங்கேறி இருக்கிறது. புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர் தேக்க தொட்டிக்குள் இறங்கி மர்ம நபர்கள் சிலர் மலம் கழித்துள்ளனர் என புகார் அளிக்கப்பட்டுள்ளது.
வேங்கை வயலில் குடிநீரில் மனித மலம் கலக்கப்பட்டது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் நடத்திய விசாரணையில், வேங்கைவயல், இறையூர் கிராமங்கள் அடங்கிய முடுக்காடு பஞ்சாயத்து தலைவராக உள்ள பத்மா முத்தையா, குடிநீர் தொட்டி ஆப்ரேட்டர் சண்முகத்தை பணி நீக்கம் செய்ததால் நடந்த விவகாரம் என தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
அவ்வூர் பஞ்சாயத்து தலைவரின் கணவரை பழிவாங்கும் வகையில், குடிநீரில் நாற்றம் வருவதாக முரளி ராஜா என்பவர் பொய் தகவலை பரப்பியதாகவும், அதன்பின் குடிநீர் தொட்டி மீது ஏறிய முத்துகிருஷ்ணன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இந்த குற்ற செயலில் ஈடுபட்டதாகவும் கூறி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கு தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில்
வேங்கை வயல் சம்பவம் போல் வேடசந்தூர் அருகே புதிதாக கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டிக்குள் இறங்கி மலம் கழித்த நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நல்லமனார்கோட்டை ஊராட்சி தொட்டனம்பட்டி கிழக்குத் தெருவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக 50அடி உயரத்தில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருகிறது.
தொட்டி முழுவதுமாக கட்டப்பட்டுவிட்ட நிலையில் இன்னும் குழாய் இணைப்புகள் கொடுக்கப்படவில்லை. இந்த நிலையில் மர்ம நபர்கள் சிலர் மேலே ஏறி தொட்டிக்குள் இறங்கி உள்ளே மலம் கழித்து அசுத்தம் செய்துள்ளனர். மேலும் தொட்டிக்குள் மது அருந்திய பிளாஸ்டிக் கப், பீடி புகையிலை உள்ளிட்ட பொருட்களும் கிடந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த பகுதி பொதுமக்கள், இதுகுறித்து எரியோடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ஊராட்சி நிர்வாகம் சார்பாக ப்ளீச்சிங் பவுடர் மட்டுமே தெளிக்கப்பட்டது. எனவே தண்ணீர் தொட்டியில் மலம் கழித்து அசுத்தம் செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் பொதுமக்கள் மற்றும் மூவேந்தர் புலிப்படை சார்பில் மனு. கொடுத்துள்ளனர். வேங்கை வயல் பிரச்சனை போல் விஷயம் பெரிதாவதற்குள் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications