ஜோதிமணி எம்.பி.யை ஒருமையில் பேசிய குஜிலியம்பாறை அதிமுக ஒ.செ. மலர்வண்ணன் - சிப்காட்டால் மூண்ட கலகம்!
திண்டுக்கல்: காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்வண்ணன் ஒருமையில் பேசிய விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட ஆர்.கோம்பை அருகே சிப்காட் அமையவுள்ளது. அந்த இடத்தை பார்வையிடச் சென்ற கரூர் காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணியை குஜிலியம்பாறை அதிமுக ஒன்றியச் செயலாளர் மலர்வண்ணன் தடுத்து நிறுத்தினார். இதனால், சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஜோதிமணிக்கு ஆர்.கோம்பை கிராமமக்கள் ஆதரவு தெரிவித்தனர்.

ஏற்கனவே சிப்காட் திட்டத்தால் தங்கள் நிலங்கள் கையகப்படுத்தக் கூடுமோ என்ற அச்சத்தில் இருந்த மக்கள், அதிமுக ஒன்றியச் செயலாளரின் இந்த நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்தனர். சாதாரண ஒன்றியச் செயலாளர் ஒருவர், 6 சட்டமன்ற தொகுதி வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்டு நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட ஒரு எம்.பி.யை எப்படி தரக்குறைவாக பேசலாம் என காங்கிரஸ் நிர்வாகிகள் கேள்வி எழுப்புகின்றனர்.
கரூர் நாடாளுமன்றத் தொகுதிக்குள் வேடசந்தூர், கரூர், அரவக்குறிச்சி, கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, விராலிமலை என 6 சட்டமன்ற தொகுதிகளும் திண்டுக்கல், கரூர், திருச்சி, புதுக்கோட்டை என 4 மாவட்டங்களுக்கு கீழ் வருவது குறிப்பிடத்தக்கது. வேடசந்தூர் தொகுதிக்குட்பட்ட வள்ளிமலையை அழித்து சிப்காட் அமையவுள்ளது என்பது ஜோதிமணியின் குற்றச்சாட்டு.
இதனிடையே ஆர்.கோம்பையில் நடந்த இந்த களேபரங்களை தடுக்க வேண்டிய காவல்துறையினர் என்ன செய்தார்கள் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தாம் கடிதம் எழுதவுள்ளதாக ஒன் இந்தியா தமிழிடம் ஜோதிமணி எம்.பி. தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications