திண்டுக்கல் அரசு பெண் ஊழியர் மர்ம மரணம்.. கொலையா? நடந்தது என்ன? தீவிர விசாரணை
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் வீட்டில் தனியாக வசித்து வந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியர் மர்மமுறையில் உயிரிழந்துள்ளார். உடலில் காயங்கள் இருப்பதால் நகைக்காக யாரேனும் கொலை செய்து விட்டு சென்றார்களா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
தனியாக வசித்து வந்த தாய் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தாருக்கும் மருத்துவமனையின் சக ஊழியர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சித்தா பிரிவில் ஊழியர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் கண்ணா நகரில் வசித்து வந்தார் சுப்புலட்சுமி. 58 வயதான இவர் வத்தலக்குண்டு அரசு மருத்துவ மனையில் சித்தா பிரிவில் பணிபுரிந்து வந்தார். இவரது கணவர் காளியப்பன் ஏற்கனவே இறந்துவிட்டார். சுப்புலட்சுமியின் மகன் முத்துகுமார் என்பவருக்கு திருமணம் ஆகி அவர் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக சுப்புலட்சுமி வேலைக்கு வராததால் அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து வரும் சக ஊழியர்கள் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தனர். ஆனால் அவரது செல்போன் அணைக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள், சுப்புலட்சுமியின் மகனை தொடர்பு கொண்டு தகவலை தெரிவித்தனர்.

படுகாயங்களுடன் சடலம்
இதனால் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் அவரும் தாயை தொடர்பு கொள்ள முயற்சித்தார். எதிர்முனையில் இருந்து எந்த பதிலும் வராததால் உடனடியாக வத்தலகுண்டுவில் உள்ள வீட்டிற்கு நேரடியாக சென்றார். அப்போது கதவு உள்பக்கமாக தாழிட்டிருந்தது. பின்னர் வீட்டின் பின்புறம் சென்ற முத்துக்குமார் சுப்புலட்சுமி கழிவறையில் சடலமாக கிடப்பதை பார்த்து கதறி அழுதார். இதை அடுத்து அக்கம் பக்கத்தினர் திரண்டனர். காவல்துறைக்கு தகவல் அளிக்க அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பணத்திற்காக கொலையா?
தலையில் காயங்களுடன் சுப்புலட்சுமி இறந்து கிடப்பதால் யாரேனும் கொலை செய்துவிட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கி உள்ளனர். சுப்புலட்சுமியின் உடல் கைப்பற்றப்பட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் அம்மிக்கல் உள்ளிட்ட பொருட்கள் சந்தேகத்திற்கிடமாக உள்ளதால் சுப்புலட்சுமி வீட்டில் தனியாக இருப்பதை தெரிந்து கொண்டு நகைக்காக யாரேனும் கொன்றுவிட்டு சென்றனரா என்ற அடிப்படையிலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மோப்ப நாய் உதவியுடன் விசாரணை
இந்த வழக்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் , வத்தலகுண்டு காவல்நிலைய சார் ஆய்வாளார் தயாநிதி விசாரித்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் குழுவினர் மோப்ப நாய் உதவியோடு விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications