கொடைக்கானல் போறீங்களா? மறந்தும் தண்ணீர் பாட்டில் கொண்டு போகாதீங்க! 10 ஆயிரம் பைன் போட்ட அதிகாரிகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் வைத்திருந்தால் பசுமை வரி விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. ஒரு பாட்டிலுக்கு 20 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில் ஒரு சில சுற்றுலா பயணிகள் நகராட்சி பணியாளர்களிடம் வாக்குவாதம் செய்வதால் பரபரப்பு ஏற்பட்டது.
சர்வதேச சுற்றுலா தளமாக இருக்கக்கூடிய கொடைக்கானலில் வார இறுதி நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அதிகப்படியான சுற்றுலாப்பயணிகள் வந்து செல்வதால் அடிக்கடி இங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது,

இதனை கட்டுப்படுத்தும் விதமாக சென்னை உயர்நீதிமன்றம் கடந்த மே மாதத்தில் இருந்து இ-பாஸ் நடைமுறையை அமல்படுத்த உத்தரவிட்டு இருந்தது.
இந்த இ-பாஸ் நடைமுறையின் காரணமாக எந்த பகுதியில் இருந்து,எத்தனை சுற்றுலா பயணிகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் வந்து செல்கின்றன என்பது குறித்து முழு தகவல்களும் இந்த இ பாஸ் தளத்தில் பதிவாகிறது. அதனை தொடர்ந்து கொடைக்கானல் நுழைவாயில் பகுதி இருக்கக்கூடிய சோதனைச்சாவடியில் நகராட்சி பணியாளர்கள் இந்த இ பாஸ் குறிப்பை சோதனை செய்த பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக இந்த இ-பாஸ் நடைமுறையை முறையாக பயன்படுத்தவில்லை என்ற ஒரு குற்றச்சாட்டை சென்னை உயர் நீதிமன்ற குறிப்பிட்டு இன்று முதல் தமிழகத்தில் இருக்கக்கூடிய நீலகிரி மற்றும் கொடைக்கானல் மலை பகுதிகளுக்கு இ-பாஸ் பெற்ற வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என ஒரு ஆணையும் பிறப்பித்து இருந்தது.
அதனை தொடர்ந்து இன்று வார இறுதி நாள் என்பதால் அதிகாலை முதல் சுற்றுலா பயணிகள் அதிகளவில் படையெடுத்து வருகின்றனர். இதனால் இங்குள்ள சோதனை சாவடியில் இ பாஸ் குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சுற்றுலா வாகனங்கள் உள்ளே அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நுழைவாயில் சோதனை செய்து வருவதால் இங்கிருந்து சுமார் ஐந்து கிலோ மீட்டர் தூரத்துக்கு மேலாக சுற்றுலா வானங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து காத்திருக்கின்றன.
இந்த நிலையில் கொடைக்கானலுக்கு சுற்றுலா வருபவர்கள் இந்த இ பாஸ் குறித்து தகவல தெரியாமல் இந்த பகுதியில் வந்த பிறகு இ பாஸில் பதிவேற்றம் செய்து வருவதால் இந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது. மேலும் இந்த இ-பாஸ் சோதனை குறித்து இங்குள்ள நகராட்சி பணியாளர்களுக்கும் சுற்றுலா பயணிகளுக்கும் அடிக்கடி வாக்குவாதமும் ஏற்பட்டு வருகிறது. இதனை சரி செய்யும் விதமாக கூடுதலான காவலர்களை பணி அமர்த்தி போக்குவரத்தை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் தற்போது எழுந்துள்ளது.
இது ஒருபுறம் இருக்க, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிக்கு வருகைப் புரியும் வாகனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் வைத்திருந்தால் பசுமை வரி விதிக்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. கொடைக்கானல் மலைப்பகுதிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலாப் பணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இதன் காரணமாக வனப்பகுதிகள் மற்றும் முக்கிய நகர் பகுதியில் ஆற்று நீரோடைப் பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள் அங்கு அதிகரித்து காணப்பட்டது.
இதனை தடுக்கும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஒரு லிட்டர் மற்றும் இரண்டு லிட்டர் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து தற்போது கொடைக்கானலுக்கு வருகைப் புரியும் வாகனங்களில் ஐந்து லிட்டருக்கும் குறைவான தடை செய்யப்பட்ட அனைத்து வகையான நெகிழி பாட்டில்களை பயன்படுத்தும் தனிநபர், வியாபாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு ஒரு பாட்டிலுக்கு ரூ.20 பசுமை வரி விதிக்கும் நடைமுறையினை இன்று காலை முதல் கொண்டு வரப்பட்டது.
மேலும், கொடைக்கானல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட நெகிழி மற்றும் குளிர்பான பாட்டில்கள் உபயோகம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவில் பேரில் கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றியுள்ள மலைப்பகுதிகளில் 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட நெகிழி தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்தினாலோ, வைத்திருந்தாலோ விற்பனை செய்தாலோ ஒரு நெகிழி பாட்டிலுக்கு ரூ.20/- பசுமை வரியாக விதிக்கப்பட்டு பாட்டில்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலின் பசுமையை பாதுகாக்கவும் , அபராதம் செலுத்துவதை தவிர்க்கவும் 5 லிட்டருக்கு குறைவான தடை செய்யப்பட்ட நெகிழி தண்ணீர் மற்றும் குளிர்பான பாட்டில்கள் பயன்படுத்தவோ, விற்பனை செய்திடவோ வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.
இதனிடையே ஒரு சுற்றுலா பேருந்தில், சுமார் 500 தண்ணீர் பாட்டில்கள் கொண்டு செல்லப்பட்ட நிலையில், சோதனை செய்த அதிகாரிகள், தலா ரூ.20 வீதம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தனர்.












Click it and Unblock the Notifications