இன்னும் சில வாரம்தானாம்.. தமிழ்நாடு அரசு கவிழ்ந்து போய்விடுமாம்.. சொல்வது எச்.ராஜா
திண்டுக்கல்: தமிழக அரசு இன்னும் ஓரிரு வாரங்களில் கலைக்கப்படலாம் என எச். ராஜா பகீர் தகவலை அளித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலைக் கோயில் பாதுகாப்பு பேரவை சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா பங்கேற்றார். அப்போது அவர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அவர் பேசுகையில் பழனி மலைக் கோயிலில் இந்து அல்லாதோர் நுழைவது என்பது சட்டவிரோதம். தமிழக அரசுதான் மதசார்பற்றதே தவிர தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை என்பது மதம் சார்புடையது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சராக உள்ள சேகர்பாபு இந்து மதத்திற்கு எதிரான அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார்.

பழனி அருகே கள்ளிமந்தையம் பகுதியில் உள்ள திருக்கோயிலுக்கு சொந்தமான கோ சாலையில் உள்ள பசுக்கள் பராமரிப்பின்றி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளது. பக்தர்கள் தானமாக வழங்கும் பசுக்களில் பலவற்றை கேரளாவில் அடிமாட்டு விலைக்கு அனுப்பிவிடுகிறார்கள். அங்கு அவை இறைச்சிக்காக வெட்டப்படுகிறது.
பசுக்களை எல்லாம் இப்படி அனுப்பிவிட்டால் 288 ஏக்கர் நிலத்தில் சிப்காட் நிறுவனம் அமைக்க அமைச்சர் முயற்சிக்கிறார். இந்து சமய அறநிலையத் துறை அரசுக்கு சொந்தமானது தவிர இந்து கோயில் அரசுக்கு சொந்தமானது இல்லை. அது இந்து மக்களுக்கானது. பழனி கோயிலுக்கு அனைத்து மதத்தினரும் வரலாம் என்றால் கோவை கோட்டை ஈஸ்வரன் கோயில் முன்பு நடந்த சம்பவம் வரும் காலங்களில் நடக்காது என உத்தரவாதம் கொடுப்பார்களா?
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாக இல்லை என தமிழக முதல்வர் கூறுவது கேலிக்கூத்து. பாமக தொண்டர் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். 50 விசாரணைக் கைதிகள் மரணம் உள்ளிட்டவை நடந்துள்ள நிலையில் முதல்வர் எப்படி சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படவில்லை என சொல்லலாம்.
முதல்வர் ஸ்டாலின் வீட்டில் எப்போது சிபிஐ நுழையுமோ, அவரது குடும்பத்தில் துர்கா ஸ்டாலினை தவிர மற்ற அனைவரும் சிறைக்கு செல்வது உறுதி என்பதால் சிபிஐ தமிழகத்திற்குள் நுழையக் கூடாது என தெரிவித்திருக்கிறார். இவையெல்லாமே சட்டம் ஒழுங்கு சீர்கெட்டிருக்கிறது என்பதை தெளிவாக விளக்குகிறது.
இன்னும் ஓரிரு வாரத்தில் திமுக ஆட்சி கலைக்கப்படலாம். மிகப் பெரிய ஊழல் குற்றம் செய்த அமைச்சரை காப்பாற்ற முயற்சிப்பதும் 38 நாட்களாக ஒரு அமைச்சரை மருத்துவமனையிலேயே வைத்திருப்பதும் ஏன். அவருக்கு என்ன ஆனது என்பது குறித்து கூட இதுவரை யாருக்கும் தெரியாத அளவுக்கு மறைத்து வைத்திருந்தது ஏன் என எச்.ராஜா கடுமையாக விமர்சித்திருந்தார்.












Click it and Unblock the Notifications