ரஜினிக்கு கே.எஸ்.அழகிரி அட்வைஸ் கொடுத்தால்.. எச். ராஜாவுக்கு கோபம் வருதே!
ப.சிதம்பரம், கேஎஸ் அழகிரியை எச் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்
பழனி: காங்கிரசில் இனியும் இருக்கணுமா என்று அழகிரிதான் யோசிக்க வேண்டும் என்றும், ரஜினிக்கு அட்வைஸ் தரும் தகுதி அழகிரிக்கு இல்லை என்றும் எச்.ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
வரும் வேலூர் எம்பி தேர்தலில் ஏசி சண்முகத்துக்கு, ரஜினி மக்கள் மன்றத்தினர் ஆதரவு தரப்போவதாக சில தினங்களாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இதை பற்றி செய்தியாளர்கள் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரியிடம் கருத்து கேட்டிருந்தனர். அதற்கு அவர் பதிலளித்ததாவது:

தியேட்டர்கள்
"வேலூரில் தியேட்டர்கள் நிறைய இருக்கின்றன. அதனால் ரசிகர்கள் ரஜினி படத்தை திரையிட்டு பார்க்கட்டும். ஆனால் தேர்தலை பொறுத்தவரை ரஜினிகாந்த் ரசிகர்களால் ஒன்றும் நடந்து விட போவதில்லை. சினிமா வேறு, அரசியல் வேறு என்பதை முதலில் ரஜினிகாந்த் புரிந்துகொள்ள வேண்டும்.

வேண்டுகோள்
எம்ஜிஆருக்கு பிறகு சினிமாவில் யாருமே அரசியல் வானில் ஜொலிக்கவில்லை. எனவே அரசியல் என்ற வீண் முயற்சியில் ரஜினிகாந்த் ஈடுபட வேண்டாம். இதை நான் அவருடைய ரசிகனாக கேட்டுக்கொள்கிறேன்" என்று கூறியிருந்தார். இதை பற்றி செய்தியாளர்கள் பழனியில் எச்.ராஜாவிடம் கருத்து கேட்டனர். இதற்கு பதிலளித்த எச்.ராஜா, அழகிரியுடன் சேர்த்து சிதம்பரம், கார்த்திக் என மொத்தமாக இழுத்து கொண்டு வந்து விமர்சித்து விட்டார்.

ராகுல்காந்தி
"ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள ராகுல்காந்தி, ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் தலைமையில் இயங்கும் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, இனிமேலும் தான் அரசியலில் இருக்க வேண்டுமா? என்பதை யோசிக்க வேண்டும். ஏனென்றால், ரஜினிக்கு ஆலோசனை வழங்க வேண்டிய தகுதி அவருக்கு கிடையாது.

வக்கீல்
3-ல் இரண்டு பங்கு எம்எல்ஏக்கள் மாற்றுக்கட்சிக்கு போனால் கட்சித் தாவல் தடை சட்டம் செல்லாது என்பது கூட தெரியாமல் இருக்கிறார் சட்டம் படித்த ப.சிதம்பரம். இவருக்கு பாஜக பற்றி பேச தகுதியே இல்லை. படித்தவரே என்றாலும், வக்கீலே என்றாலும் பணம் சேர்ப்பதில்தான் குறியாய் இருக்கிறார். அதனால் சிதம்பரத்திற்கு சட்டம் மறந்து போய் விட்டது. உங்கள் கட்சி உறுப்பினர்களை பாதுகாக்க முடியாத காங்கிரஸ் கட்சி பாஜகவை குற்றம் சாட்டுவது முறையானது கிடையாது" என்றார்.












Click it and Unblock the Notifications