நெடுஞ்சாலையில் மடக்கிய போலீஸ்.. திண்டுக்கல்லில் அமலாக்கத்துறை அதிகாரி சிக்கியது எப்படி? பரபர தகவல்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் அரசு மருத்துவரை மிரட்டி லஞ்சம் வாங்கிய அமலாக்கத்துறை அதிகாரியை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் சிக்கியது எப்படி? என்பது குறித்து பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
நாடு முழுவதும் சட்ட விரோத பணபரிமாற்ற புகார்களில் சிக்கும் தொழில் அதிபர்கள், அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அவ்வப்போது சோதனை நடத்தி வருகிறது. எதிர்க்கட்சிகளின் ஆளும் மாநிலங்களில் அரசியல் பழிவாங்கலுக்காக அமலாக்கத்துறையை மத்திய அரசு ஏவி விடுவதாக குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படுகின்றன.

அந்த வகையில், டெல்லி, தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டில் இந்நாள் முன்னாள் அமைச்சர்கள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் வீடுகள், அலுவலகங்களில் பல்வேறு வழக்குகளின் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகள் குழு சோதனை நடத்தினர். அண்மையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், மணல் குவாரி விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு சம்மன் அனுப்பி இருந்தனர்.
ரூ.20 லட்சம் லஞ்சம்: இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல திண்டுக்கல் மாவட்டத்திலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தொழிலதிபர் ரத்தினம் உள்ளிட்டோர் வீடுகளில் அடுத்தடுத்து சோதனை நடத்தி இருந்தனர். தற்போது மணல் விவகாரத்தில் தொழிலதிபர் ரத்தினம் தலைமறைவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்தது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் இருந்து டாக்டர் சுரேஷ் பாபுவை விடுதலை செய்ய ரூ3 கோடி லஞ்சம் வேண்டும் என்று அமலாக்கத்துறையில் பணி செய்வதாக கூறிக் கொண்ட அங்கித் திவாரி என்பவர் கேட்டுள்ளார். இதில் முதல் கட்டமாக ரூ20 லட்சம் தர ஒப்புக் கொண்டார் டாக்டர் சுரேஷ் பாபு. கடந்த மாதம் ரூ.20 லட்சம் பெற்றுக் கொண்டார் அங்கித் திவாரி.
ரசாயனம் தடவிய பணம்: ஆனால் மேலும் ரூ31 லட்சம் தந்தாக வேண்டும் என டாக்டர் சுரேஷ் பாபுவை அங்கித் திவாரி மிரட்டி இருக்கிறார். இதனால் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் டாக்டர் சுரேஷ் பாபு புகார் கொடுத்தார். இதையடுத்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். இதற்காக ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கித் திவாரியிடம் கொடுக்க சுரேஷ் பாபுவுக்கு அறுவுறுத்தியுள்ளனர்.
இதன்படியே டாக்டர் சுரேஷ் பாபுவும், ரசாயனம் தடயவிய ரூபாய் நோட்டுக்களை கொடுத்துள்ளார். மதுரை நெடுஞ்சாலையில் வைத்து சுரேஷ் பாபுவிடம் ரூ.31 லட்சம் வாங்கிக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிருந்து செல்ல முயன்றுள்ளர். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரை பார்த்ததும் அதிர்ச்சி அடைந்த அங்கித் திவாரி, தப்பி ஓட முயன்றுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலையில்: அவரை தொடர்ந்து விரட்டி சென்று திண்டுக்கல் - மதுரை தேசிய நெடுஞ்சாலையில் வைத்து போலீசார் பிடித்தனர். அங்கித் திவாரியின் காரில் இருந்த 31 லட்சம் பணத்தையும் கைப்பற்றியதோடு அவரிடம் பல மணி நேரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். லஞ்சப் புகாரில் அமலாக்கத்துறை அதிகாரியே சிக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications