இப்பவும் நாமதான் ‘டாப்’ல இருக்கணும்.. தோழமை கட்சிக்காக டார்கெட் வைத்து களத்தில் இறங்கிய ஐ.பெரியசாமி!
திண்டுக்கல்: இந்த முறையும் இமாலய வெற்றியை இலக்காக நிர்ணயித்து, திமுகவினரை தேர்தல் வேலைகளில் துரிதப்படுத்தி வருகிறார் திமுக அமைச்சர் ஐ.பெரியசாமி. உடல் நலப் பிரச்சனைகள், வழக்கு, சீட் கூட்டணிக்கு ஒதுக்கப்பட்டதால் கட்சியினர் மத்தியில் அதிருப்தி என பல சிக்கல்கள் இருந்தாலும், ஐ.பெரியசாமியின் தேர்தல் பணிகள் வேகமெடுத்துள்ளன.
தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக, லோக்சபா தேர்தல் கூட்டணி தொகுதிப் பங்கீடு முடித்து, தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. திமுக இந்த முறை 21 தொகுதிகளில் நேரடியாகப் போட்டியிடுகிறது. திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு தலா 2 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

திண்டுக்கல்லில் மார்க்சிஸ்ட்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கடந்த முறை அக்கட்சி வென்ற கோவைக்கு பதிலாக இந்த முறை திண்டுக்கல் தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து திண்டுக்கல் தொகுதி வேட்பாளராக, சிபிஐஎம் மாவட்டச் செயலாளர் சச்சிதானந்தம் அறிவிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, திமுக கூட்டணி தேர்தல் வேலைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
இமாலய வெற்றி: கடந்த 2019 லோக்சபா தேர்தலில் திமுக வேட்பாளர் வேலுச்சாமி 5.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற தொகுதி திண்டுக்கல். தமிழ்நாட்டிலேயே, ஏன் தென்னிந்தியாவிலேயே மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி கிடைத்த தொகுதி திண்டுக்கல் தான்.

திமுக சார்பில் போட்டியிட்ட வேலுச்சாமி 7,46,523 வாக்குகள் பெற்று அமோக வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஜோதிமுத்துவால் வெறும் 2,07,551 வாக்குகள் மட்டுமே பெற முடிந்தது. முடிவில் 5.39 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முடிசூடினார் திமுகவின் வேலுச்சாமி.
கூட்டணி கட்சிக்கு: இந்த முறையும், திமுகவே திண்டுக்கல்லில் நேரடியாக போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கோவையை வைத்துக்கொண்டு திண்டுக்கல்லை தாரைவார்த்தது திமுக தலைமை.திண்டுக்கல் மாவட்டத்தில் ஐ.பெரியசாமி, சக்கரபாணி என 2 அமைச்சர்கள் இருந்தும், திண்டுக்கல் தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பது, திண்டுக்கல் மாவட்ட திமுகவினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

வேகப்படுத்தும் ஐ.பெரியசாமி: சீட் கேட்ட சிலரும், தற்போது அதிருப்தியில் இருப்பதாக பேச்சுகள் நிலவுகின்றன. ஆனால், அதிருப்தியாளர்களை எல்லாம் தனது மகனும் பழனி எம்.எல்.ஏவுமான ஐ.பி.செந்தில்குமார் மூலம் சரிக்கட்டி, தேர்தலுக்கு புயல் வேகத்தில் திண்டுக்கல் மாவட்ட திமுகவினரை ஆயத்தப்படுத்தி வருகிறார் அமைச்சர் ஐ.பெரியசாமி.
ஐ.பெரியசாமி கடந்த சில வருடங்களாகவே பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறார். வீடு ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்ததாக அவர் மீது வழக்கும் நடைபெற்று வருகிறது. எனினும், இவற்றையெல்லாம் ஒதுக்கித் தள்ளி, தேர்தலில் கூட்டணி வேட்பாளருக்காக முழுவீச்சில் பணிகளைத் தொடங்கியுள்ளார் ஐ.பெரியசாமி.
கட்சியின் நிர்வாகிகளை அழைத்துப் பேசி, இந்த முறையும் திண்டுக்கல் தொகுதியில் தான் மிக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் நம் கூட்டணி வெற்றி பெற்றாக வேண்டும். மார்க்சிஸ்ட் வேட்பாளருக்கு தோளோடு தோள் நின்று பணியாற்ற வேண்டும், மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று தலைவரின் காலடியில் சமர்ப்பிப்போம் எனப் பேசி இருக்கிறாராம்.
அதிமுக கூட்டணியில்: மறுபுறம், அதிமுகவில் முன்னாள் அமைச்சர்கள் இருவரின் வாரிசுகள் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதேசமயம், கடந்த முறை பெற்ற 5 லட்ச வாக்குகள் வித்தியாசத்தைப் பார்த்து அரண்டு போய், கூட்டணியில் இருக்கும் எஸ்.டி.பி.ஐ கட்சிக்கு திண்டுக்கல் தொகுதியை கொடுத்து விடலாமா என்ற யோசனையிலும் அதிமுக இருக்கிறதாம். பாஜக கூட்டணியில், பாமகவுக்கு இத்தொகுதி ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.












Click it and Unblock the Notifications