ஹிட்டாச்சி பறந்தா வந்தது? கொடைக்கானலை கருவறுக்கும் இயந்திரங்கள்! ஆழ்ந்த உறக்கத்தில் அதிகாரிகள்!
திண்டுக்கல்: இயற்கை எழில் சூழ்ந்த கொடைக்கானலில் ஹிட்டாச்சி, ஜேசிபி உள்ளிட்ட கனரக இயந்திரங்கள் மூலம் நிலத்தை சீர் செய்வதற்கும், பாறைகளை உடைப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் தடையை மீறி கனரக இயந்திரங்கள் மூலம் நிலத்தை சீர் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கிளாவரை பகுதியில் நிலப்பிளவு ஏற்பட்டு மக்கள் அச்சத்தில் உறைந்த நிலையில், தற்போது கனரக வாகனங்கள் சுதந்திரமாக இயங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்து இருந்தாலும் அந்த உத்தரவு காற்றில் விடப்பட்டுள்ளதாக குமுறுகின்றனர் கொடைக்கானல் வாசிகள்.
மலைகளின் இளவரசி என அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம், கேரளம், ஆந்திரா, கர்நாடக போன்ற பல்வேறு வெளிமாநிலங்களிருந்து விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஏராளமான சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகமாக காணப்படுவது வழக்கம்.
இங்குள்ள முக்கிய சுற்றுலாத் தலங்களான பிரையண்ட் பூங்கா, கோக்கர்ஸ்வாக், ரோஜா தோட்டம், குணா குகை, பசுமை பள்ளத்தாக்கு, பைன் மரக்காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய இடங்களில் சுற்றுலாப்பயணிகள் கூட்டம் கூட்டமாக இயற்கை அழகை கண்டு ரசித்தும் புகைப்படங்களை எடுத்தும் செல்பி எடுத்தும் மகிழ்ச்சியடைவர்.

கொடைக்கானல் சட்டவிரோத பணிகள்
இந்நிலையில், நாளுக்கு நாள் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கை தாண்டி வரும் நிலையில் சட்டவிரோத கட்டுமானங்களும், காடு அழிப்பும் அதிகரித்து வருகிறது. கொடைக்கானல் மலைப்பகுதிகளில் ஹிட்டாச்சி, ஜேசிபி உள்ளிட்ட இயந்திரங்களை பயன்படுத்தி நிலத்தை சீர் செய்வதற்கும், பாறைகளை உடைப்பதற்கும் தடை உள்ளது. ஆனாலும் தடையை மீறி பல்வேறு இடங்களில் கனரக இயந்திரங்கள் மூலம் பாறைகள் உடைக்கப்பட்டு நிலங்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. இதனால் வயநாடு போல ஒரு பெரும் இயற்கை பேரிடரை எந்த நேரமும் கொடைக்கானல் எதிர்கொள்ளலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
பாறை உடைப்பு
அது மட்டுமல்லாமல் கடந்த 2024 செப்டம்பர் மாதம் கொடைக்கானல் மேல்மலை பகுதியான கிளாவரை பகுதியில் ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு அருகே சுமார் 300 அடி நீளத்துக்கு மேல் நிலத்தில் பிளவு ஏற்பட்டது. கொடைக்கானலில் நில அதிர்வு எதுவும் ஏற்படாத நிலையில் திடீரென நிலப் பிளவு ஏற்பட்டது அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தொடர்ந்து ஆய்வு நடத்தப்பட்டு பொதுமக்கள் பயப்பட தேவையில்லை என புவியியல் வல்லுனர்கள் கூறியிருந்தனர். இந்த நிலையில் மீண்டும் கொடைக்கானலில் கனரக இயந்திரங்களைக் கொண்டு நிலத்தை சமப்படுத்தும் பகுதிகளும் வாடகை உடைக்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.
நீதிமன்றம் தடை
கொடைக்கானல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயற்கை வளங்களை பாதுகாக்கும் விதமாக கனரக வாகனம் பயன்படுத்துவது மற்றும் பாறைகளை உடைப்பதற்கு நீதிமன்றம் தடை விதித்து உள்ளது.
இந்த நிலையில் நீதிமன்ற உத்தரவு மற்றும் அரசு அதிகாரிகளின் தடைகளை மீறி கொடைக்கானல் பள்ளங்கி கோம்பை செல்லும் பகுதியில் உள்ள தனியார் நிலத்தில் பாறைகளை வெடி வைத்து குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ளது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும், கொடைக்கானல் வருவாய் அதிகாரிகள் அப்பகுதியில் நேரில் ஆய்வு நடத்தி பாறைகளை உடைப்பதற்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தை பறிமுதல் செய்தும் 50,000 ரூபாய் அபதாரம் விதிக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் அபாயம்
இந்த நிலையில் தான் இந்த சம்பவம் பல கேள்விகளை எழுப்பி இருக்கிறது. நீதிமன்ற உத்தரவு, அதிகாரிகளின் தடையை மீறி கீழ் பகுதியில் இருந்து கொடைக்கானல் பகுதிக்கு ஜேசிபி பொக்லைன் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டது எப்படி? வெடிவைத்து பாறைகள் தகர்க்கப்பட்டது அங்கிருந்த கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு தெரியாதா? வனத்துறை செக் போஸ்ட் தாண்டி பொக்லைன் உள்ளிட்ட வாகனங்கள் சென்றது எப்படி? என கேள்வி எழுப்புகின்ரனர் சமூக ஆர்வலர்கள்.
கொடைக்கானல் பிரச்சனை
இதனால் வனத்துறைக்கும் இதில் தொடர்புள்ளதா? வருவாய்த்துறை அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபடுகிறார்களா? என அடுக்கடுக்காக கேள்வி எழுப்புகின்றனர் பொதுமக்கள் கொடைக்கானலை பொறுத்தவரை ஏற்கனவே சொன்னது போல காடு அழிப்பும் சட்டவிரோத கட்டுமானங்களும் அதிகரித்து வரும் நிலையில் இது போன்ற சம்பவங்களால் கொடைக்கானல் வரும் அபாயத்தை சந்திக்கும் வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர்.
அதிகாரிகள் அலட்சியம்
இந்த சம்பவம் வெளிவந்ததை அடுத்து கொடைக்கானலில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்திருக்கிறார் மாவட்ட ஆட்சியர் சரவணன். அதே நேரத்தில் "கனரக வாகனங்கள் எப்படி கொண்டு செல்லப்பட்டது என்பது குறித்து உரிய விசாரணை நடத்தப்படவில்லை எனவும், கனரக இயந்திரங்கள் பயன்படுவதும் செய்திகள் வெளியானால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிப்பதும் மட்டுமே மாவட்ட நிர்வாகத்தின் கடமை என நினைத்துக் கொள்கிறார்கள். கொடைக்கானல் முழுவதும் உரிய ஆய்வு நடத்துவதோடு கீழ் பகுதிகளில் இருந்து கொடைக்கானலுக்கு கனரக வாகனங்கள் வருவதை முற்றிலும் தடை செய்ய வேண்டும்" என கோரிக்கை விடுக்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.












Click it and Unblock the Notifications