சிங்கப்பெண்ணே... திண்டுக்கல்: பெரும்பாலான முதன்மை பதவிகளில் கோலோச்சும் மகளிர்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் புதிய எஸ்.பியாக ரவளி பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து திண்டுக்கல் மாவட்டத்தில் ஆட்சியர், எஸ்.பி,. முதன்மை நீதிபதி என நிர்வாகத்தின் முதல்நிலை பொறுப்புகளில் மகளிரே கோலோச்சுகின்றனர்.
தமிழகத்தில் அண்மையில் ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதில் மாதவரம் உதவி ஆணையராக பணியாற்றிய ரவளி பிரியா திண்டுக்கல் மாவட்ட எஸ்.பியாக நியமிக்கப்பட்டார்.

திண்டுக்கல் எஸ்.பி.யாக இருந்த சக்திவேல், சென்னையில் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு எஸ்.பி.யாக மாற்றப்பட்டுள்ளார். திண்டுக்கல் மாவட்டத்தில் ஏற்கனவே ஏ.எஸ்.பி.யாக பணியாற்றியவர் ரவளி பிரியா.
தற்போது திண்டுக்கல் எஸ்.பி.யாக ரவளி பிரியா நியமிக்கப்பட்டிருக்கும் நிலையில் ஏற்கனவே மாவட்ட ஆட்சியராக விஜயலட்சுமி பதவியில் இருக்கிறார். மாவட்ட முதன்மை நீதிபதியாக ஜமுனா, மாவட்ட வன அலுவலராக வித்யா, மாவட்ட திட்ட இயக்குநராக கவிதா ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சியின் மேயர் பதவியும் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தலில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் திண்டுக்கல்லில் போட்டியிட காத்திருந்தனர். ஆனால் மாநகராட்சி தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதால் மேயராக பெண் ஒருவர் பதவி வகிக்க முடியாத நிலை.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசின் முதன்மை நிர்வாகப் பணிகளில் பெண் அதிகாரிகளே கோலோச்சி வருகின்றனர். இவர்களது பணி திண்டுக்கல் போன்ற பின்தங்கிய, கிராமப்புறங்கள் நிறைந்த பகுதி மாணவியருக்கு முன்னுதாரணங்களாகவும் தன்னம்பிக்கை தூணாகவும் திகழும் என்பதில் ஐயமில்லை.












Click it and Unblock the Notifications