கரூர் விவகாரம்.. நீதிபதி, முதல்வர் தொடர்பாக அவதூறு.. தவெக திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் கைது!
திண்டுக்கல்: கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் வழக்கில் நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவிட்ட தவெகவைச் சேர்ந்த திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சோசியல் மீடியாவில் முதல்வர், நீதிபதி உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாகவும் கைது செய்யப்பட்டுள்ளார்.
செப்டம்பர் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். அந்த பிரச்சாரக் கூட்டத்தில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தின் போது கரூரில் இருந்து விரைவாக திருச்சி வந்த விஜய், அங்கிருந்து தனி விமானம் மூலமாக சென்னை வந்தார். அதன்பின் 4 மணி நேரத்தில் ஒரு ட்வீட்டை பதிவிட்ட விஜய், 3 நாட்களுக்கு பின் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

இந்த விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்றம் தவெக தலைவர் விஜய்யை கடுமையாக சாடியது. தவெக தலைவர் விஜய்க்கு தலைமைப் பண்பே இல்லை.. தவெக என்ன மாதிரியான கட்சி.. ஒட்டுமொத்தமாக சம்பவத்திற்கு பின் நிர்வாகிகளும் ஓடிவிட்டனர் என்று சாடியது. இது தவெகவுக்கு கடுமையான பின்னடைவை ஏற்படுத்தியது.
குறிப்பாக நீதிபதி செந்தில் குமாரின் கருத்துக்கள் தவெகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனிடையே கரூர் விவகாரம் தொடர்பாக அவதூறு பரப்புபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்தது. அதன்பின்னரும் அவதூறு பரப்பிய யூட்யூபர் மாரிதாஸ் உட்பட ஏராளமானோரை கைது செய்தது.
இதனிடையே தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் உள்ளிட்டோர் தலைமறைவாகினர். இன்று வரை எங்கிருக்கிறார்கள் என்பதே தெரியவில்லை. காவல்துறையும் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகிறது. இதனிடையே தவெக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
நாமக்கல் மாவட்டச் செயலாளர் சதீஷ் குமாரை போலீசார் தேடி வருகின்றனர். அவரும் தலைமறைவான நிலையில், தவெகவை பலரும் தலைமறைவு வெற்றிக் கழகம் என்று கிண்டல் செய்யத் தொடங்கினர். இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் வழக்கில் நீதிபதி கூறிய கருத்தை விமர்சித்து அவதூறு பதிவிட்ட தவெகவைச் சேர்ந்த திண்டுக்கல் தெற்கு மாவட்டச் செயலாளர் நிர்மல் குமார் கைது செய்யப்பட்டுள்ளார்.
சோசியல் மீடியாவில் முதல்வர், நீதிபதி உள்ளிட்டோர் குறித்து அவதூறு பரப்பியதாகவும் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் சாணார்பட்டி போலீசார் நிர்மல் குமாரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தவெகவில் மாவட்டச் செயலாளர்கள் கைது, தலைமறைவு என்று தொடர்ந்து நடப்பதால், அக்கட்சியினர் சோகத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications