என்னை பற்றி மட்டும் கேள்! செந்தில்பாலாஜி பற்றி வந்து விழுந்த கேள்வி! கடுகடுத்த அமைச்சர் கே.என்.நேரு!
திண்டுக்கல்: அமைச்சர் செந்தில்பாலாஜி தொடர்புடைய இடங்களில் நடைபெற்று வரும் வருமான வரித்துறை சோதனை பற்றி தன்னிடம் கேட்க வேண்டாம் எனக் கூறிவிட்டார் அமைச்சர் கே.என்.நேரு.
திண்டுக்கல் மாவட்டத்தில் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வைகை அணையிலிருந்து திண்டுக்கல் மற்றும் ஆத்தூருக்கு தண்ணீர் கொண்டுவரப்படும் எனக் கூறிக்கொண்டிருந்த நேருவிடம், செய்தியாளர் ஒருவர் செந்தில்பாலாஜி பற்றி கேள்வி கேட்டார்.

இதையடுத்து அமைச்சர் நேருவின் முகம் கடுகடுவென மாறியதோடு, அவருக்கு ஏன் நான் முட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை போல் ஒரு ரியாக்ஷனை காட்டிவிட்டு என்னை பற்றி மட்டும் கேள் என டென்ஷன் ஆனார். மீண்டும் அதே கேள்வியை அந்த செய்தியாளர் முன் வைத்ததால், ஏம்பா என கோபித்துக்கொண்டு அங்கிருந்து சட்டென புறப்பட்டார் அமைச்சர் நேரு.
மொத்தத்தில் செந்தில்பாலாஜிக்காக தாம் வக்காலத்து வாங்கி பேச முடியாது என்பதை சீனியர் அமைச்சரான நேரு சூசகமாக தெரிவித்துவிட்டார். இதனிடையே கோவை மாநகராட்சி விவகாரத்தில் ஏற்கனவே அமைச்சர்கள் கே.என்.நேருவுக்கும், செந்தில்பாலாஜிக்கும் இடையே பனிப்போர் நிலவி வருவது உள் விவகாரங்களை அறிந்தவர்களுக்கு நன்கு தெரியும்.
அமைச்சர் செந்தில்பாலாஜிக்காக ஆர்.எஸ்.பாரதியை தவிர வேறு எந்த அமைச்சரும் செய்தியாளர்கள் சந்திப்பின் போது வாய் திறக்கவில்லை என்பது இங்கு கவனிக்கத்தக்கது. இதன் மூலம் திமுகவில் உள்ள முக்கியப் பிரமுகர்களே இந்த ரெய்டு படலத்தை ரசிக்கிறார்களா என்ற கேள்வியையும் எழ வைக்கிறது.












Click it and Unblock the Notifications