கொடைக்கானல் போறீங்களா.. அப்ப உங்களுக்குதான் ஹேப்பி நியூஸ்.. வந்தது மாற்றம்.. இனி நிறைய காசு மிச்சம்
திண்டுக்கல்: கொடைக்கானல் செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. இது பெருத்த மகிழ்ச்சியையும் தந்து வருகிறது.
திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள கொடைக்கானல் தமிழகத்திலேயே அதிமுக்கியமான சுற்றுலா இடங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது.. இங்கு பெரும்பாலான சுற்றுலா இடங்கள் வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கின்றன..

எனினும், ஒருசில இடங்களுக்கு வனத்துறையினரின் அனுமதி பெற்றே செல்ல வேண்டி உள்ளது. இதற்காக ஒருகுறிப்பிட்ட கட்டணமும் வசூலிக்கப்படுகிறது.
அதில் ஒன்றுதான் பேரிஜம் ஏரி.. இங்கு செல்வதற்கும் வனத்துறையின் மூலம் அனுமதியும், கட்டணமும் வசூல் செய்யப்பட்டு வருகிறது.. செய்யப்படசிறப்பு அனுமதி வாங்கி செல்ல வேண்டும். இந்த பேரிஜம் ஏரி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் இருக்கிறது.. வனத்துறை வாகனத்தில் செல்ல வேண்டுமானால், ஒரு நபருக்கு ரூ.100, சொந்த மற்றும் வாடகை வாகனங்களில் பயணிக்க காருக்கு ரூ.200, வேனுக்கு ரூ.300 கட்டணம் வசூலிக்கின்றனர்.
அதிரடி உயர்வு: ஆனால், ஆகஸ்ட் 2-ம் தேதி முதல் பேரிஜம் ஏரிக்குச் செல்ல நுழைவுக் கட்டணமாக காருக்கு ரூ.300, வேனுக்கு ரூ.600 என உயர்த்தப்படுவதாக வனத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது..
இந்த கட்டண உயர்வு வாடகை வாகன ஓட்டுநர்கள், சுற்றுலா பயணிகள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.. காரணம், பயணிகளுக்கு கட்டணம் வசூல் செய்யும்போது, கட்டணம் உயர்த்துவதற்கு உள்ளூர் வாடகை வாகன ஓட்டுநர்கள், வாடகை வாகன உரிமையாளர்கள் போன்றோர்களை அழைத்து வனத்துறையினர் ஆலோசிப்பது வழக்கம்.
டாக்ஸி வேன்: ஆனால் இந்த முறை யாரிடமும் ஆலோசிக்கவில்லை.. திடீர் கட்டண உயர்வு தொடர்பாக எந்த முன்னறிவிப்பும் இல்லை.. இப்படி திடுதிப்பென்று கட்டணத்தை உயர்த்திவிடவும், கொடைக்கானல் சுற்றுலா டாக்சி வேன் ஓட்டுனர்கள், சுற்றுலாப்பயணிகள் அதிர்ந்துவிட்டனர்..

இப்படி கட்டண உயர்வால், பேரிஜம் ஏரிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை குறைந்துவிடும் என்றும், சுற்றுலாவை நம்பியுள்ள வாடகை வாகன ஓட்டுநர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும் என்றும் அச்சம் தெரிவித்தனர். அதனால், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று அவர்கள் கோரிக்கையும் விடுத்திருந்தனர். இந்நிலையில், இந்த கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு, கட்டண உயர்வு தற்போது வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சந்தோஷம்: கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதிக்கு செல்லும் வாகனங்களுக்கு, பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.. கொடைக்கானல் வாகன ஓட்டுனர்கள் எதிர்ப்பு தெரிவித்து வனத்துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், பழைய கட்டண நடைமுறையே தொடரும் என்று மாவட்ட வன அலுவலர் யோகேஷ் குமார் மீனா அறிவித்துள்ளார். இது வாகன ஓட்டிகள் உட்பட சுற்றுலா பயணிகளுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்து வருகிறது.












Click it and Unblock the Notifications