மோடி ஆட்சிக்கு எதிராக 'கொலவெறியில்' தமிழகம்-அண்ணாமலை கோவைக்கு ஓடினாலும் ஜெயிக்க முடியாது...ஜோதிமணி
திண்டுக்கல்: தமிழ்நாட்டு வாக்காளர்கள் பிரதமர் மோடி ஆட்சிக்கு எதிராக கொலவெறியில் கடும் அதிருப்தியில் இருக்கின்றனர்; இதனால் கரூர் தொகுதியை சேர்ந்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதிக்கு ஓடிப் போய் போட்டியிட்டாலும் வெல்லவே முடியாது என கரூர் லோக்சபா தொகுதி எம்பி ஜோதிமணி எம்பி கடுமையாக சாடியுள்ளார்.
லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு கரூர் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. கரூர் லோக்சபா தொகுதியில் திமுக இம்முறை போட்டியிட வேண்டும் என அக்கட்சி நிர்வாகிகள் கட்சித் தலைமையிடம் வலியுறுத்தி இருந்தனர். ஆனால் இந்த முறையும் கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் கட்சிக்கே ஒதுக்கப்பட்டது. கரூர் லோக்சபா தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக சிட்டிங் எம்பி ஜோதிமணியே மீண்டும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதனையடுத்து கரூர் லோக்சபா தொகுதியில் தேர்தல் பிரசாரத்தை தீவிரமாக தொடங்கிவிட்டார் ஜோதிமணி. கரூர் தொகுதிக்குட்பட்ட திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் நடைபெற்ற "இந்தியா" கூட்டணியின் செயல் வீரர்கள் கூட்டத்தில் ஜோதிமணி நேற்று பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, சக்கரபாணி, வேடசந்தூர் திமுக எம்.எல்.ஏ. காந்திராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து வேடசந்தூர் தொகுதியில் ஜோதிமணி எம்பி வாக்கு சேகரித்தார்.
ஜோதிமணி எம்பி வேடசந்தூர் தொகுதியில் வாக்கு சேகரித்த போது செய்தியாளர்களிடம் கூறியதாவது: பாஜகவை என்ன ஒரு பொருட்டா நினைக்க சொல்றீங்க? பாஜகவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை கரூர் லோக்சபா தொகுதியைச் சேர்ந்தவர். பாஜக ஆஹா, ஓஹோன்னு இருக்கிறது எனில் நரேந்திர மோடி ஆஹா, ஓஹோன்னு தமிழ்நாட்டு மக்களுக்கு ஏதாவது செய்திருந்தால் அண்ணாமலை, சொந்த ஊரில் சொந்த தொகுதியில் நிற்க வேண்டியதுதானே? எதற்காக கோயம்புத்தூருக்கு அண்ணாமலை ஓடவேண்டும்? அப்ப கரூரில் ஜெயிக்க முடியாது என்பது அவருக்கே தெரியும். அதனால்தான் கோவைக்கு ஓடுகிறார். அதனால்தான் பாஜகவை ஒரு பொருட்டாக நினைக்க வேண்டியதும் இல்லை. கோவையிலும் அதான் நடக்கப் போகிறது. கரூரில் என்ன நடக்கும் என பயந்துகிட்டு கோவைக்கு போறீங்களோ அதுதான் அங்கேயும் நடக்கப் போகிறது.

தமிழ்நாட்டு மக்களைப் பொறுத்தவரை நரேந்திர மோடி ஆட்சிக்கு எதிராக 'கொலவெறி'யில் இருக்கிறார்கள். வெள்ளம் வருது.. புயல் வருது.. மக்கள் கண்ணீரிலும் தண்ணீரிலும் தத்தளிக்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணத்தை தமிழ்நாட்டு மக்களுக்கு கொடுங்கள் என தமிழ்நாட்டு முதலமைச்சர் கேட்கிறார்.. ஆனால் நயா பைசா வந்ததா? வரலை.. பிரதமர் மோடி வந்தாரா? வரலை.. இப்ப எதுக்கு 5 முறை பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார்? தேர்தல் நடைபெறுகிறது என்பதற்காக மோடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். தமிழ்நாடு மக்கள் கஷ்டப்பட்ட போது வராத பிரதமர் மோடிக்கு இப்போது தமிழ்நாட்டில் என்னவேலை? மோடி 100 முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் ஒன்றும் நடக்கப் போவது இல்லையே.. இவ்வாறு ஜோதிமணி எம்பி தெரிவித்தார்.

2019-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்ட ஜோதிமணி, 6,95,697 (63.06%) வாக்குகளைப் பெற்றார். ஆனால் 2014-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் இல்லாமல் போட்டியிட்ட ஜோதிமணிக்கு 30,459 வாக்குகள் மட்டுமே கிடைத்தது. அத்தேர்தலில் அதிமுகவின் தம்பிதுரை வெற்றி பெற்றார். திமுகவின் சின்னசாமி 2-வது இடத்தையும் தேமுதிகவின் கிருஷ்ணன் 3-வது இடத்தையும் பெற்றார். ஜோதிமணிக்கு 4-வது இடம்தான் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications