மகளிர் உரிமை தொகை.. இப்படி எல்லாமா நடக்கும்.. திகைக்க வைத்த திண்டுக்கல் பெண்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே முருகேஸ்வரி என்ற பெண்ணுக்கு போக வேண்டிய மகளிர் உரிமை தொகை, கடந்த 14 மாதங்களாக முதியவரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. தனக்கு வர வேண்டிய மகளிர் உரிமை தொகையை மீட்டு தரவேண்டும் என்று முருகேஸ்வரி கோரிக்கை வைத்துள்ளார். வங்கிக் கணக்கின் கடைசி எண்ணை தவறாக பதிவிட்டதால் இந்த பிரச்சனை எழுந்ததாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே ரெட்டியபட்டி என்ற கிராமம் இருக்கிறது. இந்த கிராமத்தில் உள்ள காஞ்சி பெரியவர் நகரை சேர்ந்த 43 வயதாகும் முத்துப்பாண்டி என்பவர் முறுக்கு வியாபாரியாவர். இவரது மனைவி முருகேஸ்வரி (வயது 40) தம்பதிக்கு கண்ணன், மகேஸ்வரன் என்ற 2 மகன்கள் இருக்கிறார்கள்.

முருகேஸ்வரிக்கு கடந்த ஆண்டு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணப்பித்திருக்கிறார். தமிழக அரசு தரப்பில் இருந்து முருகேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு உங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. நீங்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று முருகேஸ்வரிக்கு குறுஞ்செய்தி வந்திருக்கிறது. இதற்கிடையே முருகேஸ்வரி தனது விண்ணப்பத்தில் வடமதுரையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் முருகேஸ்வரி வங்கிக் கணக்கின் கடைசி எண்ணை தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தததாம்..
ஆனால் முருகேஸ்வரிக்கு போக வேண்டிய பணம். கடந்த 14 மாதங்களாக அதே வங்கியில் கணக்கு வைத்துள்ள காணப்பாடியைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டிருக்கிறதாம். ஆனால் முருகேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு பணம் வரவு வைக்கப்பட்டதாக எஸ்எம்எஸ் மட்டும் வந்துள்ளதாம். இதில் அந்த முதியவர் முதல் 3 மாதங்கள் மட்டும் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து முருகேஸ்வரியிடம் கொடுத்தாராம். அதன்பின்னர் அவர் பணத்தை தரவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்ட முருகேஸ்வரி, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து நடந்த சம்பவத்தை கண்ணீர் மல்க பேசிய முருகேஸ்வரி , முதல்வர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி மகளிர் உரிமை தொகை பணத்தை மீட்டு தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்












Click it and Unblock the Notifications