போக்குவரத்துக் கழக தற்காலிக ஓட்டுநர், நடத்துநர்களுக்கு பணி நிரந்தரம்... அமைச்சர் ஐ.பெரியசாமி தகவல்!
திண்டுக்கல்: போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிக ஓட்டுநர்கள், நடத்துநர்களாக இருப்பவர்கள் விரைவில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ரெட்டியார்சத்திரத்திலிருந்து புதிதாக 16 வழிதடங்களில் டவுன் பஸ்களை கொடியசைத்து தொடங்கி வைத்த அவர் இதனைக் கூறினார்.
இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக தமிழகத்தை மாற்ற முதலமைச்சர் ஸ்டாலின் கடுமையான உழைப்பை செலுத்தி வருவதாக தெரிவித்திருக்கிறார்.

டவுன் பஸ்
மேலும் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்து எட்டாயிரம் பெண்கள் நகரப் பேருந்துகளில் கட்டணமில்லாமல் பயணித்து பயன்பெற்று வருவதாக தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா நோய்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு பத்துக்கும் கீழ் எண்ணிக்கை குறைந்த தகவலை வெளியிட்டார்.

பட்டயப் படிப்பு
கூட்டுறவுத்துறையில் அளிக்கப்பட்ட அனைத்து வாக்குறுதிகளையும் ஒவ்வொன்றாக முதலமைச்சர் ஸ்டாலின் நிறைவேற்றி வருவதாக கூறினார். கூட்டுறவுத்துறை பட்டயப் படிப்பில் இதற்கு முன் 150 மாணவர்கள் படித்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது 600க்கு மேற்பட்ட மாணவர்கள் பட்டயப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ளதாக அமைச்சர் ஐ.பி.தெரிவித்துள்ளார்.

ஐ.பி. நம்பிக்கை
கடந்த 2006-2011 திமுக ஆட்சிக் காலத்தில் தற்காலிக மின்வாரிய ஊழியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டது போல், தற்போது போக்குவரத்து துறையில் தற்காலிக பணியாளர்களாக பணியாற்றி வரும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களுக்கும் பணி நிரந்தரம் வழங்கப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமைச்சர் ஐ.பெரியசாமி வெளியிட்டுள்ள இந்த தகவல் போக்குவரத்துக் கழகத்தில் பணி நிரந்தரம் எதிர்பார்த்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான பணியாளர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.

தனியார் பேருந்துகள்
இதேபோல் திண்டுக்கல்லில் இருந்து மதுரை, திருச்சி, காரைக்குடி, பழனி போன்ற வெளியூர் செல்லக்கூடிய தனியார் பேருந்துகள் தங்களுக்கு உரிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்காமல் மாற்றுப்பாதையில் பேருந்துகளை இயக்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது என்றும் ஆய்வில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்தார். மேலும், தமிழகம் முழுவதும் 2,500 புதிய பேருந்துகள் இயக்கப்படவுள்ள தகவலையும் அமைச்சர் ஐ.பி. வெளியிட்டார்.












Click it and Unblock the Notifications