பழனி முருகன் கோவிலில் துர்கா ஸ்டாலின் தரிசனம்! கூடவே வலம் வந்த மெர்சி செந்தில்குமார்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி முருகன் கோவிலில் முதலமைச்சர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் சாமி தரிசனம் செய்தார்.
முதலமைச்சர் ஸ்டாலினின் மனைவி துர்கா ஸ்டாலினை பொறுத்தவரை ஆன்மிகத்தில் அதிகம் நாட்டம் உடையவர். தமிழ்நாடு முழுவதும் கோவில் கோவிலாக சென்று வழிபடக்கூடியவர். துர்கா ஸ்டாலின் தனது கொள்கைக்கு நேர் எதிரானவர் என்றாலும் கூட, தனிநபர் சுதந்திரத்தில் ஸ்டாலின் தலையிட்டதில்லை. அவரது ஆன்மிக பயணத்திற்கு ஒரு போதும் தடை போட்டதில்லை.

குறிப்பாக முதலமைச்சர் ஸ்டாலினுடன் எந்த ஊருக்கு சுற்றுப்பயணம் சென்றாலும் அந்த ஊரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு விசிட் அடிக்க தவறமாட்டார் துர்கா ஸ்டாலின். இதனிடையே இன்றைய தினம் பழனி முருகன் கோவிலில் தரிசனம் செய்து மனமுருக வழிபட்டார். அவருடன் அவரது தங்கை ஜெயந்தி, பழனி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் மனைவி மெர்சி ஆகியோர் கோவிலுக்கு வந்திருந்தனர்.
துர்கா ஸ்டாலினின் பழனி வருகை குறித்த தகவல் லோக்கல் கட்சிக்காரர்களுக்கு கூட தெரிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேவையற்ற கூட்டம் கூடும் என்பதால் இந்தத் தகவல் தெரிவிக்கப்படவில்லையாம். ரோப் கார் மூலம் மலைக்கு சென்ற துர்கா ஸ்டாலினை கோவில் நிர்வாகத்தினர் வரவேற்று அழைத்துச் சென்றனர். முன்னதாக துர்கா ஸ்டாலின் வருகையையொட்டி கோவிலில் முன்னேற்பாடுகளை மெர்சி செந்தில்குமார் செய்து வைத்திருந்தார்.
பழனி முருகன் கோவில் பிரசாதங்களை பெற்றுக்கொண்ட துர்கா ஸ்டாலின் மீண்டும் ரோப் கார் மூலம் மலையிலிருந்து இறங்கி காரில் புறப்பட்டுச் சென்றார். இதனிடையே இந்த நிகழ்வு முடிந்து புறப்படும் போது மெர்சி செந்தில்குமார் குடும்ப விவகாரங்கள் சிலவற்றை துர்கா ஸ்டாலினிடம் மனம் விட்டு பகிர்ந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications