இதுதான் சார் எங்க தமிழ்நாடு.. முருக பக்தர்கள் பாதத்தை மசாஜ் செய்யும் இஸ்லாமியர்கள்! பழனியில் பரவசம்!
திண்டுக்கல்: முருகப்பெருமானின் மூன்றாம் படை வீடான திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு முருகனின் மூன்றாம் படை வீடான பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் கால்களில் மசாஜ் செய்து மருத்துவ உதவி அளித்தும் வருவது மத நல்லிணக்கத்திற்கு சான்றாக அமைந்துள்ளது.
அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அமைந்துள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெற்று வரும் நிலையில், மலைக் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து பக்தர்கள் வருகை தருவர்.
இந்நிலையில் தற்போது தைப்பூச விழாவையொட்டி பழனிக்கு பாதயாத்திரை பக்தர்கள் வருகை தொடங்கியுள்ளது. இதனையடுத்து, மதுரை, சிவகாசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்கள் கம்பம், வத்தலகுண்டு, நத்தம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் பாதயாத்திரையாக வருகின்றனர்.
இதேபோல், நத்தம் வழியாக, சிவகங்கை, காரைக்குடி, புதுக்கோட்டையைச் சேர்ந்த பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வருகின்றனர். மேலும், திண்டுக்கல், பொள்ளாச்சி, செம்பட்டி வழியாக பழனிக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்காக தர்மத்துப்பட்டி, கன்னிவாடி, ரெட்டியார்சத்திரம், ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, ஆயக்குடி, கணவாய்பட்டி, கூம்பூர், ஊதியூர், குமரலிங்கம் உள்பட 14 இடங்களில் மின்சாரம், கழிப்பிடம், குளியலறை உள்ளிட்ட வசதிகளுடன் தங்கும் கூடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பழனி அடுத்த ஆயக்குடி அருகே திண்டுக்கல் சாலையில் நடந்து வரும் முருக பக்தர்களுக்கு இஸ்லாமியர்கள் மருத்துவ உதவிகளோடு, பாதங்களுக்கு மசாஜ் செய்து வருவது மதநல்லிணக்கத்துக்கு சான்றாக அமைந்துள்ளது. பழனி ஆயக்குடி காயிதே மில்லத் அறக்கட்டளை மற்றும் ஆயக்குடி ஜமாத் சார்பில் தொடர்ந்து பல ஆண்டுகளாக பழனி பாதயாத்திரை பக்தர்களுக்காக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு சேவை செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டும் பல கிலோமீட்டர்கள் தூரம் நடந்து வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு கால் வலியை போக்கக் கூடிய மருந்துகள், மற்றும் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் நெடுந்தூரம் நடந்து வரும் முருக பக்தர்களுக்கு கால்களில் மருந்துகளை தடவி மசாஜ் செய்து சேவை செய்தனர். மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் இந்துக்கள் இஸ்லாமியர்கள் ஒற்றுமையை பறைசாற்றும் வகையில் மருத்துவ முகாம் அமைத்து கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்படுத்தி வருகின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரம்: திருப்பரங்குன்றத்தில் மத நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடைபெற்று வரும் நிலையில, மூன்றாம் படைவீடான பழனியில் இஸ்லாமியர்கள் முருக பக்தர்களுக்கு சேவை செய்யும் நிகழ்வு பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதல் படை வீடாக மதுரை திருப்பரங்குன்றம் உள்ளது.
அங்கு தமிழகம் முழுவதிலுமிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆண்டுதோறும் தரிசனம் செய்கின்றனர். இந்த நிலையில் மலையில் உள்ள சிக்கந்தர் பாதுஷா தர்காவில் ஆடு கோழிகளை பலியிட வேண்டும் என இஸ்லாமிய மக்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், அங்கு ஆடு கோழிகளை பலியிட தடை விதிக்கப்பட்டது. இரு தரப்பினரிடையே கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.












Click it and Unblock the Notifications