தேர்தல் பணியில் இருந்த காவல்துறை டி.எஸ்.பிக்கு நேர்ந்த சோகம்.. திடீர் இதய செயலிழப்பால் பலி!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் தொகுதியில் நேற்று தேர்தல் பணியில் இருந்த காவல்துறை டி.எஸ்.பி ராமகிருஷ்ணன் (58) இதய செயலிழப்பால் திடீரென உயிரிழந்துள்ளார். உயிரிழந்த ராமகிருஷ்ணன், ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்குப் பிரிவில் டி.எஸ்.பி. ஆக பணியில் இருந்தவர்.
சட்டசபை தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான போலீசாருக்கு வேறு மாவட்டங்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டது. அந்தவகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் மதுவிலக்குப் பிரிவில் டி.எஸ்.பி. ஆக பணியில் இருந்த ராமகிருஷ்ணனுக்கு திண்டுக்கல் மாவட்டத்துக்கு மாற்றுப் பணி வழங்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன், ஒட்டன்சத்திரம் தொகுதி கண்காணிப்புப் பணிக்கு நியமிக்கப்பட்டார். ஒட்டன்சத்திரத்தை அடுத்த கள்ளிமந்தையம், இடைகோட்டை பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த ராமகிருஷ்ணனுக்கு நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.
இதையடுத்து, உடனடியாக ஒட்டன்சத்திரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராமகிருஷ்ணன் உயிரிழந்தார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். தேர்தல் பாதுகாப்பு பணியில் இருந்த டிஎஸ்பி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று நடைபெற்ற தேர்தலில் 89.25 சதவீத வாக்குகள் பதிவானது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், நிலக்கோட்டை, நத்தம், திண்டுக்கல், வேடசந்தூர் ஆகிய 7 சட்டசபை தொகுதிகளில், பிரதான அரசியல் கட்சிகள், சுயேச்சைகள் என மொத்தம் 115 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.












Click it and Unblock the Notifications