இங்க பாருங்க.. இது துப்பாக்கியாம்.. எப்படி ரெடி பண்ணிருக்காங்க பாருங்க.. திண்டுக்கல் வழக்கில் திடுக்
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் இரவு நேரத்தில் இளைஞர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொலைக்குப் பயன்படுத்தியதாக குற்றவாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டுள்ள துப்பாக்கியின் புகைப்படம் போலீசாரால் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் அருகே உள்ள செட்டிக்குளம் என்ற குளத்தை மீன் வளர்ப்பதற்காக மேற்கு மரியநாதபுரம் பகுதியை சேர்ந்த மாணிக்கம் என்பவரின் மகன் ராக்கி என்ற ராகேஷ்குமார் குத்தகைக்கு எடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு குத்தகை எடுத்த குளத்தின் அருகில் தனது நண்பர்களுடன் மது அருந்திக் கொண்டிருந்தார்.
அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டதில் இடது விலாவில் 6 பால்ரஸ் குண்டுகள் பாய்ந்து மயங்கிய ராகேஷ் குமாரை, உடனிருந்த நண்பர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் திண்டுக்கல் தலைமை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் பொழுது மருத்துவர்கள் பரிசோதனை செய்த பொழுது அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினார்.

திண்டுக்கல்லில் அதிர்ச்சி
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்த திண்டுக்கல் சரக டிஐஜி விஜயகுமாரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசன் ஆகியோர் விரைந்து வந்து, மோப்ப நாய் ரூபி மற்றும் தடவியல் நிபுணர்கள் உதவியுடன் ஆய்வு செய்தனர். இதனை அடுத்து குற்றவாளிகளை கைது செய்வதற்காக ஏஎஸ்பி அருண் கபிலன் தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன இந்நிலையில் தென் மண்டல காவல்துறைத் தலைவர் அன்பு சம்பவம் நடந்த இடத்திற்கு நேரடியாக வந்து ஆய்வு செய்தார்.

கொலையாளிகள் 7 பேர் கைது
இந்த நிலையில் சுட்டுக் கொலை செய்யப்பட்ட வழக்கில் பிரகாஷ், கணேசமூர்த்தி, ஜான் சூர்யா, மரியபிரபு ஆகிய நான்கு குற்றவாளிகள் முதலில் கைது செய்யப்பட்டனர் எனவும், இந்த நான்கு பேரிடம் நடத்திய விசாரணையில் இந்த சம்பவத்தில் தொடர்புடைய சகாய ஜான்பால், ஆனந்தராஜ், இருதயராஜ் ஆகிய மூன்று பேர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளனர் எனவும், குற்றவாளிகளிடம் இருந்து இரண்டு அறிவாள், இவர்களால் தயாரிக்கப்பட்ட நாட்டுதுப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது என தென் மண்டல காவல்துறைத் தலைவர் அன்பு செய்தியாளர்களிடம் கூறினார்.

கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி
மேலும் கொலையாளிகள் பயன்படுத்தியதாக துப்பாக்கி போன்ற அமைப்புடைய ஒன்றையும் ஐஜி அன்பு செய்தியாளர்களிடம் காட்டினார். அதில் தண்ணீர் குழாய்க்கு பயன்படுத்தும் இரும்பு பைப்பை, கட்டையில் சொருகி, அது தானாக கழன்று விழுவதை தடுக்கும் வகையில் பழைய சைக்கிள் ட்யூப் ரப்பரை கிழித்து இறுக்கமாக கட்டியுள்ளனர் கொலையாளிகள். மேலும் அந்த துப்பாக்கியில் சுடுவதற்கு பயன்படுத்தப்படும் ட்ரிகர் எனப்படும் விசை இல்லாமல், நவீன முறையிலும் அதே நேரத்தில் "மிகக் குறுகிய நேரத்தில் அவசர அவசரமாக" கொலையாளிகள் தயாரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

திண்டுக்கல் மக்கள் அதிர்ச்சி
கொலை சம்பவத்தை விட திண்டுக்கல்லில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த புதிய வகை துப்பாக்கிதான் அப்பகுதியில் பேசு பொருளாகி உள்ளது. மேலும் சமூக வலைதளங்களில் துப்பாக்கி குறித்தும் , அதனை தயாரிக்கப்பட்ட பொருட்கள் குறித்தும் ஏராளமானோர் கருத்துகளை, துப்பாக்கியின் புகைப்படங்களோடு பகிர்ந்து வருகின்றனர்












Click it and Unblock the Notifications