"அதிமுகவை விட்டு வெளியேறு".. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர்.. கொதித்த ரரக்கள்.. போச்சே
எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தொடர்ந்து போஸ்டர் யுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல்: அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையேயான மோதல் உச்சத்தை எட்டியுள்ளது.
இதன் வெளிப்பாடாக, இருவரின் ஆதரவாளர்களும் ஒருவரையொருவர் விமர்சிப்பதும், பகிரங்கமாக போஸ்டர் அடிக்கும் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன.
அந்த வகையில், திண்டுக்கல்லில் தற்போது ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் எடப்பாடி பழனிசாமி அணியினரை கோபம் அடையச் செய்துள்ளது.

மசியாத எடப்பாடி
அதிமுகவில் ஒற்றைத் தலைமை கோஷம் வலுவடைந்ததை அடுத்து, பெரும்பாலான மாவட்டச் செயலாளர்களை எடப்பாடி பழனிசாமி தனது பக்கம் இழுத்துக் கொண்டார். 95 சதவீத மாவட்டச் செயலாளர்களும், நிர்வாகிகளும் எடப்பாடி பழனிசாமியுடன் இருக்கிறார்கள். இதன் தொடர்ச்சியாக, அவர் எளிதில் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பதவியேற்றார். இதையடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ஓபிஎஸ் நீக்கப்பட்டார். இதனால் ஏற்கனவே இரண்டாக பிளவுப்பட்ட கட்சி தற்போது 3-ஆக பிரிந்துள்ளது. இவ்வாறு அதிமுக பிரிந்துகிடப்பது திமுகவுக்கு சாதகமாகிவிடும் என்றும், ஓபிஎஸ், சசிகலா, தினகரன் ஆகியோரை மீண்டும் கட்சியில் இணைத்துக் கொள்ளலாம் என கூட்டணிக் கட்சியான பாஜக எடப்பாடி பழனிசாமியிடம் பல முறை பேசிபார்த்தும், அவர் மசியவில்லை.

தகர்ந்தது கோட்டை
இந்த சூழலில்தான் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. ஓபிஎஸ் இல்லாமல் எடப்பாடி பழனிசாமி என்ற ஒற்றைத் தலைமையின் கீழ் அதிமுக வந்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் என்பதால், இது முழுக்க முழுக்க எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை பரிசோதிக்கும் தேர்தலாகவே பார்க்கப்பட்டது. இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்தது. வெறும் 40 ஆயிரம் வாக்குகளைதான் அதிமுக பெற்றது. எம்ஜிஆர் காலத்தில் இருந்தே அதிமுகவின் கோட்டையாக விளங்கும் கொங்கு மண்டலத்தில் அதிமுக இத்தகைய மோசமான தோல்வியை தழுவியது கட்சித் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியது.

பரபரக்கும் போஸ்டர்கள்
இந்தப் பின்னணியில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இந்த தேர்தல் தோல்வியை மையமாக வைத்து எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், எடப்பாடி தலைமையில் நடைபெற்ற 8 தேர்தல்களிலும் அதிமுக தோல்வி அடைந்திருப்பதை சுட்டிக்காட்டியும் ஓபிஎஸ் அணியினர் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். தங்கள் எதிர்ப்பை காட்டும் விதமாக, கடந்த சில தினங்களாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக போஸ்டர் யுத்தத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் குதித்துள்ளனர். சில தினங்களுக்கு நெல்லை முழுவதும் எடப்பாடியை கடுமையாக விமர்சிக்கும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. அதில், "எட்டுத் தோல்வி எடப்பாடியே.. உடனே எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்" என அச்சிடப்பட்டிருந்தது. இது நெல்லையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

திண்டுக்கல் போஸ்டர்
இந்நிலையில், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இன்று பல போஸ்டர்கள் ஒட்டப்படிருந்தன. அதில், "கண்டிக்கிறோம்.. கண்டிக்கிறோம்.. அதிமுகவை 8 முறை தோல்வி பெறச் செய்த எடப்பாடியை கண்டிக்கிறோம். சமத்துவ பேரியக்கத்தை சமுதாய இயக்கமாக மாற்றிய எடப்பாடியே வெளியேறு" என அச்சிடப்பட்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தொடர்ந்து ஓபிஎஸ் ஆதரவாளர்கள் போஸ்டர்கள் அடிப்பது ஒருபுறம் இருக்க, அவரது புகைப்படங்களை கூட்டணிக் கட்சியான பாஜகவை சேர்ந்தவர்களே எரித்து வருகின்றன. இவ்வாறு பலமுனை தாக்குதல் நடத்தப்படுவதால் எடப்பாடி ஆதரவாளர்கள் சற்று கலக்கமடைந்து இருப்பதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications