ஐபிஎல் போல்... அஞ்சல் அலுவலக கணக்கு புத்தகத்தில் தனியார் விளம்பரங்கள் - இனிமே இப்டிதான்
திண்டுக்கல்: பழனியில் அஞ்சல் அலுவலக வங்கிக் கணக்கு புத்தகத்தில் தனியார் விளம்பரங்கள் மூலம் நிதி திரட்டும் திட்டத்தின்கீழ் புத்தகங்களில் விளம்பரங்கள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் அஞ்சல் நிலையங்களில் தற்போது பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இதன்படி அஞ்சல் அலுவலகங்களில் வங்கிகள் போல சேமிப்புக் கணக்கு தொடங்கவும், காப்பீட்டு நிறுவனங்கள் போல காப்பீடு செய்யவும், நீண்ட கால நிதி சேமிப்பு போன்ற சேவைகளும் தொடங்கப்பட்டு உள்ளன.

இதனால் அஞ்சல் நிலையத்திலேயே பொதுமக்களுக்கான பல்வேறு சேவைகள் கிடைத்து வந்தன. திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அஞ்சல் நிலையத்தில் இருந்து பஞ்சாமிர்தம் அனுப்புதல் முதல் பல்வேறு சிறப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர். சமீபத்தில் சுமார் ஒரு கிலோ அளவுக்கு தங்க முதலீடு பாண்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
தற்போது அஞ்சல் அட்டை, அஞ்சலக சேமிப்பு அட்டைகளில் தனியார் நிறுவனங்களின் விளம்பரம், மை ஸ்டாம்ப் மூலம் அவரவர் புகைப்படத்துடன் கூடிய ஸ்டாம்புகள் போன்றவை போன்றவற்றை கொண்டு அஞ்சல் துறை கூடுதல் நிதி திரட்டி வருகிறது. தனியார் விளம்பரங்கள் மூலம் நிதி திரட்டும் திட்டத்தின்கீழ் கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி விளம்பரம் பதிவிடப்பட்ட வங்கிக்கணக்கு புத்தகங்கள் அச்சிடப்பட்டன.
நேற்று அஞ்சலக தலைமை மேலாளர் திருமலைசாமி இதனை வெளியிட தனியார் கல்லூரி நிர்வாகி சுந்தரவடிவேல் பெற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் ஜேசிடி செயலர் துர்காசங்கர், வழக்கறிஞர் விஸ்வபாரதி, ஜேசிடி பொதுமேலாளர் ஆறுமுகம், பேராசிரியர் ரென்ஸ்விக், அஞ்சலக விற்பனை பிரிவு நிர்வாகி கனிஷ்கா, சாமிநாதன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications