அப்போ மிட்டாய்! இப்போ வாடகை வீடு.. "எங்க குலசாமி விடாது".. வீடு தர மறுத்த பெண்.. தொடரும் தீண்டாமை
திண்டுக்கல்: சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தின் தென்காசியில், மிட்டாய் கேட்ட சிறுவர்களுக்கு மிட்டாய் தர மறுத்த கடைக்காரர், ஊரில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள சாதிய தீண்டாமை குறித்து கூறியிருந்தார்.
இந்த வீடியோ தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தின் பரபரப்பு குறையும் முன்னரே மற்றொரு சம்பவமும் அரங்கேறியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் வாடகைக்கு வீடு தேடி சென்ற ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு வீடு கொடுக்க முடியாது என்றும் அதற்கு காரணமாக குல தெய்வத்தையும் வீட்டு உரிமையாளர் காரணமாக குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வேகமாக பரவி வருகிறது.

ஊர் கட்டுப்பாடு
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தீண்டாமை கொடுமைகள் சமூக வலைத்தளங்கள் வழியாக வெளியே வரத் தொடங்கியுள்ளன. பெரியாரின் பிறந்த நாளான நேற்று தமிழ்நாடு முழுவதும் சமூகநீதி நாளாக கொண்டாடப்பட்டது. ஆனால், இதே நாளில் கடை ஒன்றில் மிட்டாய் கேட்ட சிறுவர்களுக்கு அந்த ஊரில் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர் மீது ஆதிக்க சமூகத்தினர் விதித்துள்ள கட்டுப்பாடுகளை காரணம் காட்டி மிட்டாய் தர கடைக்காரர் மறுத்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கைது
சாதி என்றால் என்னவென்றும், அதன் கோரம் எப்படி இருக்கும் என்றும் அறிந்திராத பிஞ்சு குழந்தைகள் கட்டுப்பாடு என்றால் என்ன என மழலை மொழியில் திருப்பி கேட்டிருந்தது அனைவரின் நெஞ்சையும் நொறுக்கியது. இந்த பிஞ்சுகளின் மனதில் தீண்டாமையை விதைக்க காரணமாக இருந்தவர்கள் மீது தமிழ்நாடு அரசு அதிரடியாக நடவடிக்கை எடுத்தது. முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட கடைக்காரர் கைது செய்யப்பட்டார். மேலும் சிலர் மீதும் கைது நடவடிக்கை தொடர்ந்திருக்கிறது.

மற்றொரு சம்பவம்
இந்த சம்பவம் குறித்த பரபரப்பு அடங்குவதற்குள், மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. அதில், ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒருவர் வாடகைக்கு வீடு கேட்டு சென்றிருக்கிறார். வீட்டின் உரிமையாளரான பெண்மணி அவரிடம் அவரின் சாதி குறித்து விசாரிக்கின்றார். இவர் ஆதி திராவிடர் சமூகத்தை சேர்ந்தவர் என்று கூறியதும், வீட்டின் உரிமையாளர் வீடு கொடுக்க மறுத்துள்ளார்.

வாஞ்சையுடன் எதிர்ப்பு
இதற்கு காரணமாக தனது குல தெய்வத்தையும் குறிப்பிட்டுள்ளார். "எஸ்சியாக இருந்தால் அவர்களை எங்கள் வீடுகளுக்குள் அனுமதித்தால் எங்கள் குல தெய்வத்திற்கு அது ஒத்துக்கொள்ளாது" என்று உரிமையாளர் கூறியுள்ளார். மேலும், "இப்படி கேட்பதால் உங்களை அவமானப்படுத்துவதாக நீங்கள் எண்ண வேண்டாம்" என்றும் கூறியுள்ளார். இந்த சம்பவம் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் அரங்கேறியுள்ளது. கடந்த சில நாட்களாகவே 'இப்போ எல்லாம் யாருங்க சாதி பாக்குறா?' என்கிற கேள்வி எழுந்து வந்த நிலையில், அடுத்தடுத்து வெளிச்சத்திற்கு வரும் இந்த நவீன தீண்டாமை சம்பவங்கள், சாதி ஒழிப்பு நடவடிக்கையை தீவிரமாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதே சமயத்தில் ஒரு காலத்தில், மிரட்டியும், அடித்து துன்புறுத்தியும் தங்களது அடக்குமுறைகளை காட்டிய ஆதிக்க சமூகத்தினர் தற்போது வாஞ்சையுடன் இந்த எதிர்ப்பை காட்டி வருவதாகவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications