முருகனின் 3ஆம் படை வீடு! பழனி கோவிலில் இன்று முதல் மீண்டும் ரோப்கார் இயக்கம்! பக்தர்கள் வரவேற்பு!
திண்டுக்கல்: பழனி முருகன் கோவிலில் இன்று முதல் மீண்டும் ரோப்கார் சேவை தொடங்கப்படுவதால் பக்தர்கள் மகிழ்ச்சியும், வரவேற்பும் தெரிவித்துள்ளனர்.
முருகனின் அறுபடை வீடுகளில் 3ஆம் படை வீடாக கருதப்படும் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலுக்கு நாள் தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வந்து செல்கின்றனர். விஷேச நாட்கள் என்றால் சொல்லவே தேவையில்லை பக்தர்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காத வகையில் இருக்கும். இவ்வாறு வரும் பக்தர்கள் படிகள், மின் இழுவை ரயில், ரோப் கார் என பல வழிகளில் அவரவர் வசதிக்கேற்ப கோவிலுக்கு செல்வார்கள்.

இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் பராமரிப்பு வருடாந்திர பணிகள் காரணமாக ரோப்கார் சேவை நிறுத்தப்பட்டது. இரண்டு மாத காலம் நடைபெற்ற பராமரிப்பு பணிகளுக்கு பிறகு இன்று மீண்டும் அந்தச் சேவை பக்தர்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 2 நாட்களாக எடைக்கற்கள் மற்றும் பஞ்சாமிர்த பெட்டிகளை ரோப்காரில் வைத்து மலைக்கு மேலேயும், கீழேயும் இயக்கப்பட்டு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சோதனை ஓட்டம் வெற்றிபெற்றதை தொடர்ந்து சென்னை ஐஐடி வல்லுநர் குழுவும் ரோப்காரை இயக்கி ஆய்வு செய்தது. அந்தக் குழு கொடுத்த அனுமதியை தொடர்ந்து இன்று முதல் பக்தர்களுக்காக சேவை தொடங்கப்பட்டது. இன்று விடுமுறை தினம் என்பதால் பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை வழக்கத்தை விட கூடுதலாக இருக்கும்.
ரோப்காரை போலவே மின் இழுவை 3வது ரயிலையும் விரைவில் பக்தர்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. முதல்நாளான இன்றே ரோப் காரில் பயணித்து கோவிலை அடைவதற்காக பக்தர்கள் கூட்டம் அலை மோதுகிறது. காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே ரோப் கார் இயக்கப்படும் எனத் தெரிகிறது.
ரோப்கார் சேவை இல்லாத கடந்த 2 மாத காலமும் பக்தர்கள் அவதிக்குள்ளாகி வந்தனர். குறிப்பாக வயதான பக்தர்களுக்கு ரோப் கார் சேவை பெரிதும் உதவியாக இருந்து வந்தது.












Click it and Unblock the Notifications