கன்னியாகுமரி ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் கட்டுக்கட்டாக பணம்! 14 லட்சத்துடன் சிக்கிய பயணி.. ஷாக்
திண்டுக்கல்: திருக்குறள் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல் அருகே வந்த போது, அந்த ரயிலில் ஏறி ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். அப்போது முன்பதிவு இல்லாத பெட்டியில் பயணித்த பயணி ஒருவரின் பையில் இருந்து கட்டுக்கட்டாக பணம் சிக்கியது. இதையடுத்து அந்த நபரை பிடித்து சென்ற போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பரபர தகவல் வெளியாகியுள்ளது.
ரயில்களில் பயணிகள் போல சிலர் போதை பொருட்கள் உள்பட சட்ட விரோத பொருட்களை கடத்தும் நிகழ்வு நடைபெறுகிறது. இதனை கட்டுப்படுத்த போலீசார் அவ்வபோது சோதனை நடத்துவது வழக்கம். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வரும் ரயில்களில் அடிக்கடி இத்தகைய சோதனைகள் நடைபெறுகின்றன.

நிஜாமுதீன் - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ்
தமிழகத்திற்கு கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் வெளி மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்படுகின்றன. இதனை தடுக்கும் விதமாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களில் ரயில்வே போலீசார் சோதனை மேற்கோண்டு வருகிறார்கள். அந்த வகையில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் நின்று செல்லும் வெளிமாநில ரயில்களில் அடிக்கடி சோதனை நடைபெறுகிறது. இந்த நிலையில்தான், நிஜாமுதீன் - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் திருக்குறள் அதிவிரைவு ரயில் நேற்று முன்தினம் இரவு 10.45 மணிக்கு திண்டுக்கல்லுக்கு வந்தது.
கத்தை கத்தையாக பணம்
அப்போது ரயில்வே போலீசார் சோதனை நடத்தினர். இதில் ரயிலில் அன்ரிசர்வ்டு பெட்டியில் சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரின் பையை வாங்கி போலீசார் சோதனை நடத்தினர். இதில் அந்த பயணியின் பையில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது. இதனால் அந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கோண்டனர். இதில், கத்தை கத்தையாக பணத்துடன் சிக்கிய நபர் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பதும், இவர் பழைய கார்களை வாங்கி விற்கும் தொழில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது.
மேலும், வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்களை வாங்கி நமது நாட்டு பணமாக மாற்றி கொடுத்து வருவதும் தெரியவந்தது. அந்த வகையில், வெளிநாட்டு ரூபாய் நோட்டுக்களை சென்னை கொண்டு வந்து, ரூபாயாக மாற்றி ரயிலில் எடுத்து சென்றுள்ளார். அவரிடம் இருந்த பையில், 13,77,900 ரூபாய் பணம் இருந்தது. அவர் வைத்து இருந்த பணத்திற்கு உரிய ஆவணங்கள் இல்லாததால், ரயில்வே போலீசார் ஐடி அதிகாரிகளுக்கும் தகவல் கொடுத்தனர்.
5 மணி நேரம் விசாரணை
இதையடுத்து அங்கு வந்த வருமான வரித்துறை அதிகாரிகள் பிடிபட்ட நபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். ஹவாலா பணமா? எல்லது வேறு ஏதேனும் சட்ட விரோத செயலில் ஈடுபட்டதால் வந்த பணமா? என துருவி துருவி வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். 5 மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
பின்னர் அவரை விடுவித்த வருமான வரித்துறை அதிகாரிகள், வரும் 23 ஆம் தேதி உரிய ஆவணங்களுடன் மதுரை வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டதோடு, அவர் வைத்து இருந்த பணத்தையும் பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். கன்னியாகுமரி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் முன்பதிவு இல்லாத பெட்டியில் இருந்து பயணியிடம் கத்தை கத்தையாக பணம் சிக்கியது ரயில் பயணிகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications