திண்டுக்கல்லில் நகைச்சீட்டு நடத்தி மோசடி! கலர் கலராக ரீல்! ஏமாந்தவர்கள் வயிற்றெரிச்சலுடன் சாபம்!
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நகைச்சீட்டு நடத்திய நபர் ரூ.2 கோடி வரை மோசடி செய்துவிட்டு தலைமறைவாகிய நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நகைச் சீட்டு நடத்தி மோசடி: திண்டுக்கல் தாடிகொம்பு சாலையை சேர்ந்த ஸ்ரீகாந்த் என்பவர், கிழக்கு ரத வீதியில் ஜே.ஜே.ஜுவல்ஸ் என்ற பெயரில் சிறியளவிலான நகைக்கடை ஒன்று நடத்தி வந்திருக்கிறார். கூடவே தங்க நகை சேமிப்புத் திட்டத்தின் கீழ் நகைச்சீட்டும் நடத்தி வந்துள்ளார். அதன்பேரில் 500 ரூபாயிலிருந்து 5,000 ரூபாய் வரை அவரவர் சக்திக்கேற்ப பலரும் நகைச்சீட்டுக்கு பணம் கட்டி வந்திருக்கின்றனர். இதுமட்டுமல்ல ஆர்டரின் பேரில் நகை செய்து கொடுப்பதாகவும் கூறி பலரிடமும் அட்வான்ஸாக லட்சக்கணக்கில் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது.

வீட்டில் ஆளில்லை: இந்நிலையில் கடந்த சில நாட்களாக நகைக்கடை தொடர்ந்து பூட்டியே இருந்ததால் நகைச்சீட்டு கட்டி வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து ஸ்ரீகாந்த் வீட்டுக்கே சென்றனர். அங்கு வீட்டில் ஆளில்லை. அலைபேசியும் சுவிட்ச் ஆஃப். இதனால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த பாதிக்கப்பட்டோர் கண்ணீர் மல்க வயிற்றெரிச்சலுடன் சாபம் விட்டதோடு காவல்துறையினரிடமும், மாவட்ட ஆட்சியரிடமும் புகார் கொடுத்துள்ளனர். ஜே.ஜே.ஜுவல்ஸ் நகைக்கடையை நம்பி ஏமாந்தவர்களில் பெரும்பாலானோர் திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த கிராம மக்கள் தான்.

0% செய்கூலி, சேதாரம்: தங்கள் நகைக்கடையில் 0% செய்கூலி சேதாரம் என்றும், 3 மாதத்திற்கு ஒரு முறை குலுக்கல் முறையில் ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற பம்பர் பரிசுகள் தரப்படும் எனவும் கலர் கலராக ரீல் விட்டதோடு, நகைச்சீட்டுக்கு 10 பேரை சேர்த்துவிட்டால் ஊக்கத் தொகையாக ரூ.1000 தருவதாகவும் ஆசை வார்த்தைகளை அள்ளி வீசி இந்த மோசடியை அரங்கேற்றியிருப்பது இப்போது தெரிய வந்துள்ளது. குருவி சேர்ப்பது போல் சிறுக சிறுக சேமித்த பணத்தில் சேதாரம் இல்லாமல் நகை வாங்கலாம் என நினைத்தவர்கள், கவர்ச்சிக்கர அறிவிப்புகளை பற்றி சற்று யோசித்திருந்தால் சேதாரமின்றி தங்கள் பணத்தை பாதுகாத்திருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications