‛முருகன் பாடலில் மாறிய வரிகள்’.. ஸ்டாலினுக்கு மாணவர்கள் வைத்த ‛டிமாண்ட்’
திண்டுக்கல்: ‛உள்ளம் உருகுதய்யா முருகா' என்ற பாடலின் மெட்டில் வரிகளை மாற்றி இடிக்கப்பட்ட வகுப்பறைக்கு பதில் புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினுக்கு திண்டுக்கல் மாவட்டம் அம்மையநாயக்கனூர் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் வைத்த கோரிக்கை கவனம் பெற்றுள்ளார். இதுதொடர்பாக மாணவ-மாணவிகள் பாடிய பாடல் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு அருகே அம்மையநாயக்கனூரில் அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்று முதல் 5ம் வகுப்பு வரை ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் தான் பள்ளியில் உள்ள கட்டடங்களில் 4 வகுப்பறைகள் சேதமாகி இருந்தன.

இதையடுத்து மாணவ-மாணவிகளின் பாதுகாப்பு கருதி அந்த 4 வகுப்பறை கட்டடங்களும் ஜேசிபி வாகனம் மூலம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இடித்து அகற்றப்பட்டது. மேலும் மாணவ-மாணவிகளுக்கு புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டி கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் வகுப்பறை கட்டடங்கள் இடித்து 9 மாதங்கள் ஆகியும் இன்னும் புதிய கட்டடங்கள் கட்டி கொடுக்கப்படவில்லை.
பள்ளி வகுப்பறை கட்டடங்கள் கட்டி தர வேண்டும் என்று உயர் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தாலும் கூட அவர்கள் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் பள்ளியில் இடபற்றாக்குறையால் மாணவ-மாணவிகள் மரத்தடியில் பாடம் கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இனி மழைக்காலம் தொடங்கும் என்பதால் மாணவ-மாணவிகள் புதிய வகுப்பறை கட்டடங்கள் முக்கிய தேவையாக இருக்கிறது.
இந்நிலையில் தான் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என்பதற்காக மாணவ-மாணவிகள் முதல்வர் ஸ்டாலினுக்கு நூதன முறையில் கோரிக்கை வைத்துள்ளனர். அதாவது பள்ளி வகுப்பறையில் மாணவ-மாணவிகள் முதல்வர் ஸ்டாலினின் போட்டோவை வைத்து கைக்கூப்பி வணங்கியபடி புதிய கட்டடம் கட்டி தர வேண்டும் என்று பாடல் பாடி கோரிக்கை வைத்துள்ளனர்.
‛உள்ளம் உருகுதய்யா முருகா' எனும் பாடல் மெட்டில் வரிகளை மாற்றி மாணவ-மாணவிகள் பாடல் பாடியுள்ளனர். அந்த பாடல் என்பது ‛‛எங்கள் அன்பு முதல்வா.. எனக்கு பள்ளி கட்டி தாங்க..
மழைக்காலம் வருதே.. மழைக்காலம் வருதே.. உடனே வேலையை தொடங்கிடுங்க..
முதல்வா.. எங்கள் அன்பு முதல்வா.. எனக்கு பள்ளியை கட்டித்தாங்க..
காலை சிற்றுண்டியால் வயிறும் - மனமும் நிறைந்ததய்யா..
காலை சிற்றுண்டியால் வயிறும் - மனமும் நிறைந்ததய்யா..
இடிந்த பள்ளியினை.. இடிந்த பள்ளியினை நீங்கள் விரைந்து கட்டுமய்யா..
எங்கள் அன்பு முதல்வா.. '' என்ற வகையில் அமைந்து இருந்தது.
இந்த பாடல் தற்போது இணையதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதனை பார்க்கும் நெட்டிசன்கள் முதல்வர் ஸ்டாலின் உடனடியாக புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டி கொடுக்க பள்ளி கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications