கொடைக்கானல் போறீங்களா? மலைக்க வைக்கும் மலைப்பூண்டு... ஹேப்பியில் துள்ளும் விவசாயிகள்.. சபாஷ்
திண்டுக்கல்: மலைக்க வைக்கும் மலைப்பூண்டுகளின் விலைஉயர்வால், கொடைக்கானல் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.. ஆனாலும், தமிழக அரசுக்கு ஒரு கோரிக்கையை விடுத்துள்ளனர்.
குஜராத், மகாராஷ்டிரா, ஊட்டி போன்ற இடங்களில் விளைவிக்கப்படும் பூண்டுகளில் எடுக்கப்படும் விதையை கொடைக்கானலில் எளிதாக பயன்படுத்த முடியும். ஆனால், கொடைக்கானல் மலைப்பூண்டில் இருந்து விதை எடுத்து பிற இடங்களில் சாகுபடி செய்ய முடியாது.. இதுதான் கொடைக்கானல் மலைப்பூண்டின் ஸ்பெஷாலிட்டியாகும்.

மலைப்பூண்டு: கொடைக்கானலில், கவுஞ்சி, பூண்டி, மன்னவனூர், பூம்பாறை, குண்டுப்பட்டி, கூக்கால், வில்பட்டி, கிளாவரை உள்ளிட்ட 36 பகுதிகளில் சுமார் 7,000 ஏக்கர் பரப்பில் மலைப்பூண்டு விளைவிக்கப்படுகிறது..
அதாவது 900 ஹெக்டேர் பரப்பளவில் மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது... மலைப் பூண்டு பாரம்பரிய வகை மற்றும் அதிக மருத்துவ குணம் உடையது. இந்த காரணங்களை கருத்தில் கொண்டுதான், கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடும் வழங்கப்பட்டுள்ளது.
காரத்தன்மை: அதுமட்டுமல்ல, பயிரிட்ட 120 நாட்களிலேயே, மலைப்பூண்டு அறுவடைக்கு வந்துவிடும்.. ஒருவிதமான சாம்பல் நிறத்தில் காணப்படும்... சற்று காரத்தன்மையும் இருக்கும்.. இந்த மலைப்பூண்டுகளை புகை மூட்டம் செய்து பதப்படுத்தி வைத்தால், ஒரு வருஷம்கூட கெடாமல் இருக்குமாம்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு, நடவு செய்யப்பட்ட பூண்டுகள் தற்போது அறுவடை செய்யப்பட்டு வருன்றன.. காலநிலை மாற்றம், மழை போன்ற காரணங்களால் விளைச்சல் 70 சதவீதமாக மலைப்பூண்டு குறைந்துவிட்டதாம்.
விலை அதிகம்: வெளி மாநிலங்களிலும் இதே நிலைமைதான். வழக்கமாக வரும் பூண்டு வரத்து, கோயம்பேட்டுக்கு வரவில்லை.. இதனால், கடந்த வாரம் ஒரு கிலோ ரூ.250 வரை விற்ற நிலையில், இப்போது டபுளாக எகிறி ரூ.500-க்கு விற்பனையாகிறது. ஆனால், விளைச்சல் பாதித்தாலும் போதிய விலை கிடைப்பதால், விவசாயிகளுக்கு இது மகிழ்ச்சியை தந்துள்ளது.

இப்போதைக்கு கொடைக்கானலில் இருந்து மட்டுமே, மலைப்பூண்டு தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்கு செல்கிறது... அந்தவகையில், பெரியகுளம், வடுகபட்டி சந்தைக்கும் மலைப்பூண்டு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. ஆனால், இந்த சந்தை தனியார் வசம் இருப்பதால், அவர்களே விலையை நிர்ணயம் செய்து, லாபம் அடைந்து கொள்வதாக விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கிறார்கள்.
வியாபாரிகளும், புரோக்கர்களும் தங்கள் லாபத்துக்கு ஏற்றவாறு விலையை நிர்ணயிப்பதால், கஷ்டப்பட்டு விளைவிக்கும் தங்களுக்கு லாபம் கிடைப்பதில்லை சொல்கிறார்கள்.
கோரிக்கை: அதுமட்டுமல்ல, அறுவடை செய்யக்கூடிய பூண்டுகள், ஓரளவு பதப்படுத்தப்பட்டு 150 கி.மீ தூரத்தில் வாகனத்தில் கொண்டு சென்று, அதற்கு பிறகே வடுகபட்டி சந்தையில் சந்தைப்படுத்தும் நிலைமை உள்ளது. இதனால், போக்குவரத்து செலவும் அதிகமாகிவிடுவதால், கொடைக்கானலிலேயே மலைப்பூண்டுக்கு சந்தை மற்றும் பதப்படுத்தும் கிடங்கு அமைத்து தந்தால் உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications