ரூ.11,000 ஊக்கத் தொகை.. வேலையில்லாத இளைஞர்கள், பெண்களுக்கு தமிழக அரசின் அருமையான திட்டம்
திண்டுக்கல் : வேலையில்லாத இளைஞர்கள், பெண்களுக்கு கைத்தறி தொழிலை கற்றுக்கொடுத்து, அவர்களுக்கு பயிற்சி காலத்தில் நாள் ஒன்றுக்கு ரூ.250 வீதம் ஊக்கத் தொகையும் வழங்கப்பட உள்ளதாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி அறிவித்துள்ளார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடிவெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியுள்ளதாவது: கைத்தறி மற்றும் துணி நூல் துறையின் மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்டவாறு இளைஞர்களுக்கான நெசவு பயிற்சி மற்றும் தொழில் முனைவோர் திட்டம்(Young Weavers induction and Entrepreneurship Programme for Youngsters ) ரூ.1.17 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் 45 நாட்கள் பயிற்சி அளித்து அவர்களை நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினராக சேர்த்து வேலைவாய்ப்பு வழங்கப்படும். அல்லது தொழில் முனைவோர்களாக உருவாக்கப்படுவார்கள்.
இத்திட்டத்தின்படி பாரம்பரியமான கைத்தறி தொழிலை அதனுடைய பழமை மாறாமல் புத்துயிரூட்டுவது, கிராமப்புறத்திலுள்ள இளைஞர்களும் கைத்தறி தொழிலை ஒரு தொழிலாக அவர்கள் பகுதியிலேயே ஆரம்பித்து, வேலையில்லா இளைஞர்களுக்கு நெசவுத் தொழில் தொடர்பாக குறுகிய கால பயிற்சி அளிப்பதே நோக்கம் ஆகும்.
2023-24-ல் முதற்கட்டமாக 300 இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் கீழ் பயிற்சி அளிக்ககப்பட உள்ளது. கைத்தறி நெசவில் நெசவுத் தொழில்நுட்பங்களை பயிற்சியின் வாயிலாக கற்பிக்கப்பட உள்ளது.இதேபோல் இப்பயிற்சியின் வாயிலாக கைத்தறி பொருட்களின் உற்பத்தியில் தரத்தையும் அளவையும் மேம்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படவுள்ளன.
நெசவு துறை பயிற்சியில் சேரும் விண்ணப்பதாரர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.250 வீதம் பயிற்சி காலம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும். இப்பயிற்சிக்கு சேர வயது வரம்பு 18 முதல் 35 வயது வரை, கைத்தறிகளை இயக்குவதற்கு தகுதி உள்ளவர்களாக இருக்க வேண்டும். எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் பயிற்சியில் சேர விரும்பும் தகுதியுள்ள விண்ணப்பதாரரிகள் www.loomworld.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்திட வேண்டும்.
இது தொடர்பாக 11.09.2023 அன்று ஏ.என்.எச்.8ஸ்ரீ கெளரியம்மன் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம், 31/1, ஆசாரி சந்து, நாகல்நகர், திண்டுக்கல் என்ற முகவரியில் நடைபெறும் விழிப்புணர்வு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பங்களை பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம். வேலையில்லாத இளைஞர்கள், பெண்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்" இவ்வாறு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications