பழனிக்கு ஆன்மீக பயணம்.. திடீரென அந்தரத்தில் ரோப்காரில் சிக்கிய அமைச்சர் பிடிஆர்.. என்னாச்சு
திண்டுக்கல்: பழனியில் சுவாமி தரிசனத்திற்குச் சென்ற அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், மின்தடையால் அந்தரத்தில் சிக்கிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு நிதியமைச்சராக உள்ளவர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். இவர் நிதியமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு அரசின் தேவையற்ற செலவினங்கள் கணிசமாகக் குறைக்கப்பட்டு வருவாய் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மேலும், நிதிப் பற்றாக்குறையும் வெறும் 1.5 ஆண்டுகளில் கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை பலரும் தொடர்ச்சியாகப் பாராட்டி வருகின்றனர்.

கூடுதல் பொறுப்பு
அமைச்சர் பிடிஆர் சர்வதேச வங்கியில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.. இதனால் நிதி மேலாண்மையில் வல்லுநராக இவர், தேவையற்ற செலவுகளைக் கணிசமாகக் குறைத்துள்ளார். இந்தச் சூழலில் தான், கடந்த வாரம் உதயநிதி புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற போது, அமைச்சர் பிடிஆருக்கு கூடுதலாக சில துறைகள் ஒதுக்கப்பட்டது. அதாவது இதற்கு முன்பு, பிடிஆர் வசம் நிதி, திட்டமிடல், மனிதவள மேலாண்மைத் துறைகள் இருந்தன. அத்துடன் சேர்த்து இப்போது, கூடுதலாக ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர் நலன், புள்ளியியல் ஆகியவை ஒதுக்கப்பட்டது.

ஆன்மீகம்
டேட்டா சார்ந்தே முடிவுகளை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பிடிஆர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், புள்ளியில் துறை அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது ஒரு பக்கம் இருக்க, நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆன்மீகத்தில் அதிகம் நாட்டம் உள்ளவர் என்பது அனைவருக்கும் தெரியும். தொடர்ச்சியாக இவர் பல கோயில்களுக்குச் சென்று வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

மின்தடை
அதன்படி திண்டுக்கல் மாவட்டம் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலுக்குத் தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சாமி தரிசனம் செய்யச் சென்றார். அவர் மலைக்கோவிலுக்கு மேலே செல்ல ரோப்காரில் ஏறினார். அவருடன் வந்தவர்களும் ரோப் காரில் ஏறினர். அமைச்சர் ஏறிய ரோப்கார் மேலே சென்ற நிலையில், அப்போது அப்பகுதியில் திடீரென மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் மேலே சென்ற ரோப்கார் பாதியிலேயே அந்தரத்தில் தொங்கியபடி நின்றது.

அந்தரத்தில் சிக்கிய அமைச்சர்
இதனால் அங்குச் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. அந்தரத்தில் தொங்கிய ரோப்காரில் நிதியமைச்சருடன் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகன் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகளும் இருந்தனர். சில நிமிடங்கள் மின்சாரம் வராததால், அந்தரத்தில் ரோப்காருக்கு உள்ளேயே அமைச்சர் பிடிஆர் காத்திருந்தார். சில நிமிடங்கள் கழித்து, மின்சாரம் வந்தவுடன் மீண்டும் ரோப்கார் இயக்கப்பட்டது.

தசிரனம்
அதன் பிறகு மலைக்கோவிலுக்குச் சென்ற நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பழனி முருகனைத் தரிசனம் செய்தார். அவருக்குத் திருக்கோவில் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது. இதையடுத்து மீண்டும் ரோப்கார் வழியாகவே அமைச்சர் பிடிஆர் கீழே இறங்கினார். தமிழக நிதி அமைச்சர் மலைக்கோவிலுக்குச் செல்லும் போது மின்தடை காரணமாக ரோப்கார் பெட்டி பாதியிலேயே அந்தரத்தில் தொங்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் மா சுப்பிரமணியன்
தமிழக அமைச்சர்கள் வெளியே செல்லும் போது, மின்தடை ஏற்பட்டு சம்பவங்கள் நடந்து வருகிறது. முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு, சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன், சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அப்போத 3ஆம் தளத்தில் இருந்து கீழே வந்து கொண்டிருந்த போது, மின்தடை ஏற்படவே அமைச்சர் உள்ளிட்ட அதிகாரிகள் லிப்ட்டிலேயே சிக்கிக் கொண்டனர். இதையடுத்து அவர்கள் ஆபத்துக் கால கதவு மூலம் மீட்கப்பட்டன. இந்த விவகாரத்தில் இரு ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவம் நடந்து சில வாரங்களில் இப்போது அமைச்சர் பிடிஆரும் மின்தடையால் ரோப் காரில் அந்தரத்தில் சிக்கிக் கொண்டார்.












Click it and Unblock the Notifications