பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவன்.. இரக்கமே இன்றி ஆசிரியர் தந்த தண்டனை.. திண்டுக்கல்லில் சம்பவம்
எந்த காலநேரத்தில் எந்த தண்டனைகளை கொடுக்கிறோம் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும்.
திண்டுக்கல்: பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவனை உச்சி வெயிலில் ஆசிரியர் முட்டிப்போட வைத்த சம்பவம் திண்டுக்கல்லில் நடந்துள்ளது.
மாணவர்களை ஆசிரியர்கள் கண்டிப்பது தவறே இல்லை.. அதே சமயத்தில், இதுபோன்ற குரூர தண்டனைகள் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும் என்பதையும் ஆசிரியர்கள் மறக்கக்கூடாது.
ஏற்கனவே இளம் வயதினர் பலர் அடிக்கடி உயிரிழந்து வரும் நிலையில், இவ்வாறான தண்டனைகளை தவிர்க்க வேண்டும் என பெற்றோர்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சட்டமும் விளைவுகளும்..
ஆசிரியர்கள் மாணவர்களை அடிக்கக்கூடாது என்ற சட்டம் தமிழகத்தில் அமலில் உள்ளது. கடந்த காலங்களில் ஆசிரியர்கள் சிலரின் மூர்க்கத்தனமான தாக்குதல்களுக்கு மாணவர்கள் உள்ளானதால், இந்த சட்டம் பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த சட்டத்தால் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் மீதான பயமே போய்விட்டதாக தெரிகிறது. ஆசிரியர்களை கெட்ட வார்த்தைகளால் திட்டுவதும், தாக்குவதும் போன்ற செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதை பார்க்க முடிகிறது.

ஆபத்தில் முடியும் தண்டனைகள்
இதன் காரணமாக, ஆசிரியர்கள் மீது பயம் இருக்க வேண்டும் என்பதற்காக மாணவர்களுக்கு மற்ற தண்டனைகள் தற்போது பள்ளிகளில் கொடுக்கப்படுகின்றன. முழங்கால் போடுவது, தோப்புக்கரணம் போடுவது, மைதானத்தை சுற்றி ஓடச் செய்வது போன்ற தண்டனைகள் வழங்கப்படுகின்றன. இதனை பெற்றோர்களும் வரவேற்கவே செய்கிறார்கள். ஆனால், எந்த காலநேரத்தில் எந்த தண்டனைகளை கொடுக்கிறோம் என்பதை ஆசிரியர்கள் உணர வேண்டும். கடந்த மாதம் நாகப்பட்டினத்தில் ஒரு பள்ளி ஆசிரியர், மாணவர்கள் சத்தம் போட்டதற்காக அவர்களை உச்சி வெயிலில் மைதானத்தில் ஓடச் செய்தார். இதில் வெயிலின் உக்கிரம் தாங்க முடியாமல் கவிப்பிரியன் (13) என்ற 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.

லேட்டாக வந்த மாணவன்
இந்நிலையில், அந்த சம்பவத்தை நினைவுப்படுத்தும் விதமாக ஒரு சம்பவம் திண்டுக்கல்லில் நடந்திருக்கிறது. திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செந்துறையில் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. 12-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடைபெறுவதால் மற்ற வகுப்பு மாணவர்களை மதியம் பள்ளிக்கு வரும்படி ஆசிரியர்கள் அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், 10-ம் வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளிக்கு தாமதமாக வந்ததாக தெரிகிறது.

உச்சி வெயிலில்..
இதனால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ரகுநாத், அந்த மாணவனை அழைத்து திட்டியுள்ளார். மேலும், மதியம் உச்சி வெயிலில் பள்ளி மைதானத்தில் அந்த மாணவனை முட்டிப்போடச் செய்துள்ளார். இதனால் அந்த மாணவன் சூடு தாங்க முடியாமல் கதறி அழுதான். எனினும், மனம் இரங்காத அந்த ஆசிரியர், மாணவனை தொடர்ந்து வெயிலில் முட்டிப்போட செய்துள்ளார். இதை அங்குள்ள சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். ஆபத்தை உணராமல் இதுபோன்ற தண்டனை கொடுத்த ஆசிரியருக்கு பலரும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications