திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரத்தில் பெரியார் சிலைக்கு காவி சாயம்- டாக்டர் ராமதாஸ் கடும் கண்டனம்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசி அவமதிப்பு ஏற்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் தந்தை பெரியார் சிலையை அவமதிக்கும் செயல்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அண்மை காலமாக பெரியார் சிலைக்கு காவி சாயம் பூசும் நிகழ்வுகள் தொடர்கின்றன.

திமுக எம்.எல்.ஏ. செந்தில்குமார்
திண்டுக்கல் அருகே ரெட்டியார்சத்திரம் சமத்துவபுரத்தில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு திங்கள்கிழமை இரவு விஷமிகள் சிலர் காவி சாயம் பூசி அவமதிப்பு செய்தனர். இதனையடுத்து பழனி தொகுதி எம்.எல்.ஏ. ஐ.பி. செந்தில்குமார் சம்பவ இடத்துக்கு இரவே சென்று பார்வையிட்டார். உடனடியாக பெரியார் சிலையில் இருந்த காவி சாயம் அகற்றப்பட்டது. பின்னர் இரவோடு இரவாக பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. மேலும் பெரியார் சிலை மீது காவி சாயம் பூசியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் திமுகவினர் வலியுறுத்தி உள்ளனர்.

கோழைத்தனமானது
இதனிடையே பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இச்சம்பவத்துக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் தமது ட்விட்டர் பதிவில், திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார் சத்திரத்தில் தந்தை பெரியார் சிலைக்கு காவிச்சாயம் பூசப்பட்டிருப்பது கோழைத்தனமான செயலாகும். இச்செயலை செய்தவர்கள் தாங்கள் கோழைகள் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்திருக்கிறார்கள்!

நச்சுக்கிருமிகள் யார்?
தந்தை பெரியாரின் கொள்கைகளை கொள்கைகளால் எதிர்கொள்ள துணிச்சல் இல்லாதவர்கள் தான் இத்தகைய காட்டுமிராண்டித்தனமான செயல்களில் ஈடுபடுகின்றனர். இதன் பின்னணியில் உள்ள நச்சுக்கிருமிகள் அடையாளம் காணப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்!

தே.பா.சட்டத்தில் நடவடிக்கை
திருச்சி இனாம்புலியூரில் கடந்த மாதம் இதே நாளில் தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கும், இன்றைய நிகழ்வுக்கும் உள்ள தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டும். இரு குற்றங்களிலும் சம்பந்தப்பட்டவர்களை தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்! இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications