கொலைநகராகும் திண்டுக்கல்.. வெறும் 12 மணி நேரத்தில் மூவர் படுகொலை! உறைந்துபோய் கிடக்கும் பொதுமக்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 12 மணி நேரத்தில் மூன்று இடங்களில் அடுத்தடுத்து படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது புளியமரத்துசெட். இந்த பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுநாடார். இவருக்கு ஈஸ்வரன்(55). மகேந்திரன்(50) என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இருவருக்கும் திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். விவசாயம் செய்து குடும்பம் நடத்தி வரும் இவர்களுக்குச் சொந்தமாகத் தோட்டம் ஒன்று உள்ளது.

சரமாரி வெட்டு
இந்நிலையில் கடந்த சில மாதங்களாக ஈஸ்வரனுக்கும், மகேந்திரனுக்கும் இடையே சொத்து பிரச்சினை தொடர்பாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் அண்ணன்-தம்பி இருவருக்கும் இடையே நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அண்ணன் ஈஸ்வரன், தம்பி மகேந்திரனை நுங்கு வெட்டும் அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தம்பி ஓடினார்.

உயிரிழந்தார்
இதில் படுகாயமடைந்த மகேந்திரன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் பழனி தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மகேந்திரனின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகப் பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கழுத்து அறுத்து படுகொலை
அதேபோல திண்டுக்கல் முருகபவனம் அருகே லோடுமேன் சிவக்குமார் என்பவரின் மகன் பிரபாகர் பெயிண்டர் ஆக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வேலை முடித்து வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் வீடு புகுந்து கழுத்து அறுத்து பிரபாகர்(20) என்ற இளைஞரை கொலை செய்துவிட்டுத் தப்பி ஓடியுள்ளனர். இந்த கொலை குறித்து தாலுகா காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

முன்விரோதம்
இது மட்டுமின்றி நேற்று இரவு திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் தொகுதிக்கு உட்பட்ட கதிரயன் குளம் அருகே முன் விரோதம் காரணமாகச் சிவா என்ற இளைஞர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றிய உடல்கூறு ஆய்விற்காகத் திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

வெறும் 12 மணி நேரம்
திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரே இரவில் 12 மணி நேரத்தில் அடுத்தடுத்து 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவமானது பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவமானது அரங்கேறி குற்றவாளிகளைப் பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வரும் நிலையில், தற்போது கொலை சம்பவங்களும் அரங்கேறியுள்ளது காவல்துறையினருக்கு பெரும் சவாலாக உள்ளது. மூன்று இடங்களில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் திண்டுக்கல் மாவட்டத்தை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.












Click it and Unblock the Notifications