கட்டணம் பெற்றும் ஆன்லைன் வகுப்புகள் நடத்தாத 10 பள்ளிகள் மீது நடவடிக்கை: செங்கோட்டையன்
திண்டுக்கல்: தமிழகத்தில் ஆன்லைன் வகுப்புகள் சரியாக நடத்தாத 10 தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பள்ளி, கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள 376 பிரைமரி பள்ளிகளுக்கு மூன்று ஆண்டுகளுக்கான தொடர் அங்கீகாரம் வழங்கும் விழா இன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட தமிழக கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் விழாவில் பேசியதாவது:

பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள்
தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 15-ந் தேதி முதல் 7500 அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பு துவங்கப்படும். ஜனவரி 10-ந் தேதிக்குள் 7500 பள்ளிகளில் பயிற்சியாளருடன் கூடிய அறிவியல் ஆய்வு கூடம் துவங்கப்படும். ஜனவரி 15-ந் தேதி முதல் அரசு பள்ளிகளுக்கு 80,000 ஸ்மார்ட் போர்டுகள் வழங்கப்படும். தமிழகத்தில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடப் புத்தகங்கள் தரம் வாய்ந்ததாக உள்ளது. இதனால் ஐஏஎஸ் தேர்வுக்கு பயிற்சி பெறும் மாணவர்களுக்கு +1, +12 பாட புத்தகங்களை கொண்டு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

அரசு பள்ளி மாணவர்களுக்கு டேப்
நர்சரி & பிரைமரி பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகார ஆணை வழங்க அரசு விரைவில் நடவடிக்கை எடுக்கும். அரசு பள்ளிகளில் 6 முதல் 8 வரை கல்வி பயில கூடிய மாணவ மாணவியர்களுக்கு 3 லட்சம் டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.

10 பள்ளிகள் மீது நடவடிக்கை
பின்னர் செய்தியாளரிடம் செங்கோட்டையன் கூறியதாவது: கொரோனா தொற்றால் தமிழகத்தில் பள்ளிகள் மூடப்பட்டு உள்ளன. தனியார் பள்ளிகளில் ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் ஆன்லைன் மூலம் சரிவர வகுப்புகள் நடத்தாமல் மாணவர்களிடம் முழு கட்டணத்தையும் பெற்றுக் கொண்டு கல்வி பாடங்களை தாங்களே படித்துக் கொள்ள வேண்டும் என கூறுவதாக எழுந்த புகாரின் பேரில் 10 பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ரூ34,183 கோடி ஒதுக்கீடு
தமிழகத்தில் ஒவ்வொரு துறைகளிலும் முன்னோடி மாநிலமாக திகழ்ந்து வருகிறது. அரசர் காலத்தில் இருந்ததைப் போல குடிமராமத்து இத்திட்டத்தை நிறைவேற்றியதன் அடிப்படையில் புயல், சேதங்கள் இல்லாமல் தண்ணீர் நிரம்பி உள்ளன. பொருளாதாரத்தில் ஒருவர் முன்னேற வேண்டும் என்று சொன்னால் கல்வி ஒன்றால் தான் முன்னேற முடியும். இதற்காக இந்த ஆண்டு ரூ34,183 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

7.5% இடஒதுக்கீடு
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவிகிதம் இட ஒதுக்கீட்டை வழங்கி சாதாரண கிராமத்தில் இருக்கக்கூடிய மாணவன் 152 மதிப்பெண் பெற்றாலே மருத்துவராக வரலாம் என்ற வரலாறு தமிழ்நாட்டில் படைக்கப்பட்டுள்ளது. அமைதியான மாநிலம், சட்டம் ஒழுங்கை பேணி காக்கின்ற மாநிலம் மின்வெட்டே இல்லாத மாநிலம் என அனைத்து கட்டமைப்பு உள்ள மாநிலமாக தமிழகம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த ஆண்டு முழு ஆண்டுத்தேர்வு நடத்துவது குறித்து பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்து தேதி குறிப்பிட இயலாது. முதல்வர் கூட சொல்லியிருக்கிறார்...பள்ளியை திறப்பதை காட்டிலும் மாணவர்களின் உயிர்தான் முக்கியம் என்று குறிப்பிட்டுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications