60 ஆண்டுகால வேடசந்தூர் சென்டிமென்ட் காலி.. ‘பெல்வெதர்’ வரலாற்றுப் பெருமையை உடைத்தது தவெக!
திண்டுக்கல்: 60 ஆண்டுகால வரலாற்று செண்ட்டிமெண்ட்டை மாற்றி எழுதியுள்ளது தவெக. 1971 முதல் வேடசந்தூர் தொகுதியில் எந்தக் கட்சி வெற்றி பெறுகிறதோ அந்தக் கட்சியே தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடிக்கும் என்ற நிலை இருந்தது. ஆனால், தற்போது இந்த சென்டிமெண்ட் மாறியுள்ளது. வேடசந்தூர் சட்டசபை தொகுதியில் திமுக வெற்றி பெற்றுள்ள போதிலும், ஆட்சியை இழந்துள்ளது.
வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்ற சென்டிமென்ட் தொடர்ந்து இருந்து வருகிறது. வேடசந்தூர் ஒரு பெல்வெதர் (Bellwether) தொகுதி என்று அறியப்பட்டு வருகிறது. Bellwether என்ற ஆங்கில வார்த்தையானது ஓரு கூட்டத்தை வழிநடத்தும் ஆட்டுக்குட்டியை குறிக்கிறது. அதேபோல பெல்வெதர் தொகுதி என்பது எந்த கட்சி ஆட்சிக்கு வரக்கூடும் என்பதை குறிப்பாக காட்டும் தொகுதியாகும்.

அதாவது, இந்த தொகுதியில் எந்த கட்சி வேட்பாளர் வெல்கிறாரோ, அந்த கட்சியே மாநிலத்தில் ஆட்சியை பிடிக்கும். 60 ஆண்டுகாலமாக சட்டசபை தேர்தல்களில் வேடசந்தூர் தொகுதியில் வெற்றி பெறும் நபர், அவர் எந்த கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும் அந்த கட்சியே கோட்டையை பிடித்து இருக்கிறது, ஆட்சியில் அமர்ந்திருக்கிறது.
1967ல் திமுக உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேடசந்தூர் தொகுதியில் வென்றது. திமுக ஆட்சியை பிடித்தது. 1971 ஆம் ஆண்டு திமுக வேட்பாளர் வெற்றி பெற்ற நிலையில், திமுக தமிழகத்தில் அரியணை ஏறியது. 1977, 1980, 1984 ஆகிய 3 தேர்தல்களில் இங்கு அதிமுகவே வென்றது. அப்போது, 3 முறையும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்தது.
எம்ஜிஆர் மறைந்த பின்னர், 1989ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் வேடசந்தூரில் திமுக வெற்றி பெற்றது, திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தது. 1991 ஆம் ஆண்டு வேடசந்தூரை அதிமுக கைப்பற்ற, அந்த கட்சியே அரியணையில் அமர்ந்தது. ஜெயலலிதா முதல் முறையாக முதல்வரானார். 1996 சட்டசபை தேர்தலில் வேடசந்தூரில் வென்றது திமுகதான், கருணாநிதி முதல்வராக ஆட்சியில் அமர்ந்தார்.
பின்னர் 2001 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெற, மீண்டும் அதிமுக ஆட்சியமைத்தது. 2வது முறையாக முதல்வரானார் ஜெயலலிதா. 2006ல் இந்த தொகுதியை கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கியது திமுக. காங்கிரஸ் வேட்பாளரும் வென்றார். திமுக, காங்கிரஸ் துணையுடன் ஆட்சியை 5 ஆண்டுகாலம் நடத்தியது. 2011, 2016 தேர்தல்களில் அதிமுக வேட்பாளர் வெல்ல, அதிமுக ஆட்சி அமைத்தது. கடந்த 2021 தேர்தலில் இங்கு திமுக வேட்பாளர் வெல்ல, திமுக ஆட்சியில் அமர்ந்தது.
இப்படி பெல்வெதர் தொகுதியாக அறியப்படும் வேடசந்தூர் மீது ஒட்டுமொத்த கட்சிகளும், அரசியல் பார்வையாளர்களும் கண் வைத்து காத்திருந்தனர். 2026 ஆம் ஆண்டு எந்த வேட்பாளர் வெல்கிறோரோ, அந்த கட்சியை அரியணை ஏறும் என்ற நம்பிக்கையுடன் இருந்து வந்தனர். அந்த செண்ட்டிமெண்ட் தற்போது உடைந்துள்ளது.
வேடசந்தூரில் தற்போது திமுக சார்பில் வீரா சாமிநாதன், அதிமுக சார்பில் விபிபி பரமசிவம், தவெக சார்பில் நாகஜோதி, நாம் தமிழர் கட்சி சார்பில் காஜா உசேன் அகமது உள்ளிட்ட 11 பேர் களத்தில் உள்ளனர். இந்நிலையில் இந்த தேர்தலில் திமுகவின் சாமிநாதன் 10 ஆயிரம் வாக்குகளுக்கு மேல் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளார்.
வேடசந்தூர் தொகுதியில் திமுக வெற்றி பெற்ற போதிலும், தமிழகத்தில் ஆட்சியைப் பறிகொடுத்துள்ளது திமுக. 60 ஆண்டுகால சென்டிமென்ட்டை உடைத்து, தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது தவெக. தவெக, அறுதிப் பெரும்பான்மை பெறாவிட்டாலும், 105 சீட்களைக் கடந்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications