ஆண்கள் தான் குறி.. என்ன ஆச்சு திண்டுக்கல்லுக்கு? அன்று கிணறு.. இன்று அட்டைப்பெட்டி! பகீர் கொலைகள்!
திண்டுக்கல்: நேற்று முன்தினம் திண்டுக்கல் அருகே வேடசந்தூரில் கள்ளக்காதல் தகராறில் ஒருவர் கொலை செய்யப்பட்டு கை கால் கட்டப்பட்ட நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த நிலையில் திண்டுக்கல்லில் அட்டைப்பெட்டியில் பைனான்சியரின் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர் பொதுமக்கள்,
திண்டுக்கல் என்றாலே கொலைநகர் போல் ஆகிவிட்டது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் ஏராளமான கொலைகள் நடந்திருக்கிறது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக நேற்று கள்ளக்காதல் தகராறில் திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டியில் ஆண் சடலம் மீட்கப்பட்டது.
கை கால்கள் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலம் கிடந்த நிலையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் கொலை செய்யப்பட்டவர் வேடசந்தூர் அருகே பூத்தம்பட்டியைச் சேர்ந்த ஜோதிமணி என்பதும் கள்ளக்காதல் தகராறில் அவர் கொலை செய்யப்பட்டதும் தெரியவந்தது.

கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கோமதி உள்ளிட்ட ஆறு பேரை கைது செய்தனர். இந்த நிலையில், திண்டுக்கல் அருகே அட்டைப்பெட்டிக்குள் ஆண் சடலம் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல்-பழனி பைபாஸ் சாலை ராமையன்பட்டி அருகே உள்ள பாலத்தின் கீழ் நேற்று காலை துர்நாற்றம் வீசியது.மேலும் ஒரு அட்டைப்பெட்டியில் ரத்தக்கரை படிந்த தடயமும் தெரிந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் திண்டுக்கல் தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.அதன் பேரில் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் பாலத்தின் அருகே கிடந்த அட்டைப்பெட்டியை கைப்பற்றி பிரித்துப் பார்த்தனர்.அதற்குள் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் கை,கால்கள் நைலான் கயிற்றால் கட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்டு அட்டை பெட்டிக்குள் இருந்தது தெரிய வந்தது. இதனை அடுத்து அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இது குறித்து திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.
விசாரணையில் அவர் திண்டுக்கல் வ.உ.சி காலனியைச் சேர்ந்த குபேந்திரன் (வயது 58) என்பதும் பைனான்ஸ் தொழில் செய்து வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து புறநகர் போலீஸ் துணை சூப்பிரண்டு சிபி சாய் சௌந்தர்யன் மேற்பார்வையில்,தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணி, அங்கமுத்து மற்றும் போலீசார் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படை போலீசார் அந்தப் பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கேமராக்களின் காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மேலும் குபேந்திரன் தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.திண்டுக்கல்லில் பைனான்சியர் கை, கால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திண்டுக்கல்லில் அடுத்த நாட்களில் இரு கொலை சம்பவங்கள், அதுவும் கை, கால்களை கட்டி ஒரே மதிரி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
அடுத்தடுத்த கொலை சம்பவங்களால் திண்டுக்கல் மக்கள் அதிர்ச்சியடைந்திருக்கும் நிலையில், கொலைகளை தடுக்க காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications