கொடைக்கானலில் ஆளுநருக்கு எதிராக கருப்பு கொடி போராட்டம்.. காவலர்களை விரட்டிய காட்டெருமை
திண்டுக்கல்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார் இதற்காக நேற்று மாலை அவர் மதுரையில் இருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வந்தார். இந்நிலையில் ஆளுநருக்காக காவல் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்கள் மற்றும் பணியாளர்களை காட்டெருமை ஒன்று விரட்டியது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. இங்கு பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, இளநிலை ஆய்வுப்படிப்பு, முனைவர் பட்ட ஆய்வு, ஆசிரியர் பயிற்சிப்பட்ட வகுப்பு, சான்றிதழ் வகுப்புகள், சுய தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்த பல்கலைக்கழகத்தில் 31வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்பதற்காக நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட ஆர்.என்.ரவி, மதுரை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானலுக்கு வந்தார். ஆளுநர்ஆர்.என்.ரவி கொடைக்கானல் வந்ததையொட்டி அவருக்கு பாதுகாப்பு பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
அப்படி காவலர்கள் மற்றும் பணியாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போது, திடீரென காட்டெருமை ஒன்று சாலையில் வேகமாக வந்தது. அங்கு நின்றிருந்த காவலர்களை தாக்குவதற்காக வேகமாக ஓடி வந்தது. அப்போது அவர்கள் வேகமாக அங்கிருந்து ஓடி வந்து அருகில் இருந்த கட்டிடத்திற்குள் நுழைந்தனர். இதனால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக காட்டெருமையின் தாக்குதலில் இருந்து தப்பினார்கள்.
இதனிடையே ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கொடைக்கானல் மூஞ்சிக்கல் பகுதியில் திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. ஆளுநரா ஆரியநரா என்ற பதாகைகளுடன் கருப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். தொடர்ந்து போராட்டம் நடந்து வந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக நேற்று கொடைக்கானல் முழுவதும் தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் என்ற போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications