புதிய அடிமைகளை தேடும் பாஜக.. ’கை’ என்னைக்குமே நம்மை விட்டு போகாது! உறுதியாகப் பேசிய உதயநிதி ஸ்டாலின்
திண்டுக்கல்: ஒன்றிய அரசுக்கு எடப்பாடி பழனிச்சாமி அடிமை கிடைத்துள்ளார். மேலும் பல அடிமைகளை தேடி வருகின்றனர். எத்தனை அடிமைகள் வந்தாலும் திமுக விரட்டி அடிக்கும் எனக் கூறியுள்ளார் திமுக இளைஞர் செயலாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின். மேலும், என்னைக்குமே நம்மை விட்டு கை போகாது, நான் என்னுடைய கையை சொன்னேன். மேலும் உங்கள் மீது உள்ள நம்பிக்கையை கூறினேன் என காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக சூசகமாகவும் பதிலளித்துள்ளார்.
கரூர் விவகாரத்தை வைத்து விஜயை தங்களுக்கு கூட்டணிக்கு இழுக்க பல்வேறு கட்சிகளும் முயன்று வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுக, பாஜக என பல கட்சிகள் விஜயை குறி வைத்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.
மேலும் காங்கிரஸ் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்கலாம் என கூறப்படும் நிலையில் தற்போது இரண்டாம் கட்ட தலைவர்கள் விஜயை ஆதரித்து பேசி வருவது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியுடனான விஜயின் அணுகுமுறையும் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவெக காங்கிரஸ் கூட்டணி
காங்கிரஸின் இரண்டாம் நிலை தலைவர்கள் பலர் பொதுவெளியில் விஜய்க்கு ஆதரவாகப் பேசி, அவருடன் கூட்டணி அமைப்பது தமிழகத்தில் கட்சிக்கு புதிய உயிரை ஊட்டும் என்று கூறி வருகின்றனர். அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திமுகவுடன் நெருக்கமாக இருந்து வருகிறார். எனினும், முன்னாள் மாநில தலைவர்கள் சிலர் தேசிய தலைமைக்கு நேரடியாக விஜயை கூட்டணியில் சேர்க்க ஆலோசனை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.
விஜய் கூட்டணி
காங்கிரஸ் வட்டாரங்களில் பேசப்படும் தகவலின்படி, விஜய் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்தபட்சம் 60 சட்டமன்றத் தொகுதிகள், அதோடு துணை முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவையில் சில முக்கிய இடங்கள் என வலுவாக பேசி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. திமுக கூட்டணியில் இணைந்தால் குறைந்த சீட்டுகள் மட்டுமே கிடைக்கும் என்பதையும், ஆட்சிப் பொறுப்பில் பெரிய பங்கில்லாமல் போய்விடும் என்பதையும் த.வெ.க வட்டாரங்கள் கணக்கிட்டு வருகின்றன. மேலும், விஜயின் பெரும் ரசிகர் ஆதரவு காரணமாக அந்த கட்சி மக்களிடையே விரைவாக வேரூன்றும் வாய்ப்பும் உள்ளது. இதனால் தமிழகத்தில் காங்கிரஸ் வலுவடையும் என்று சிலர் டெல்லி தலைமையிடம் வலியுறுத்தி வருகின்றனர் என சொல்லப்படுகிறது.
உதயநிதி ஸ்டாலின்
இந்நிலையில் காங்கிரஸ் கட்சி திமுகவை விட்டு போகாது என மறைமுகமாக கூறியுள்ளார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின். என்னைக்குமே நம்மை விட்டு 'கை' போகாது, நான் என்னுடைய கையை சொன்னேன். மேலும் உங்கள் மீது உள்ள நம்பிக்கையை கூறினேன் என காங்கிரஸ் கூட்டணி தொடர்பாக சூசகமாகவும் பதிலளித்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் திமுக இல்ல நிர்வாகி இல்ல திருமண விழாவில் பேசிய அவர்" தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய வரி பணம் ஒன்றிய அரசு தரவில்லை. எத்தனை கோடி கொடுத்தாலும் தமிழ்நாட்டில் எப்போதும் புதிய கல்வி கொள்கையை கொண்டு வரமாட்டார் முதல்வர்.
எடப்பாடி பழனிச்சாமி
தமிழ்நாட்டில் நடைபெற்று வரும் திட்டங்களை மற்ற மாநிலங்கள் உற்று கவனிக்கிறார்கள். மற்ற மாநில முதல்வர்கள் எல்லாம் தமிழ்நாட்டில் முதல்வரை பலோ செய்து வருகிறார்கள். எடப்பாடி பழனிச்சாமி ஒரு பஸ் எடுத்து கிட்டு ஊர் ஊராக சுற்றுகிறார். எடப்பாடி பழனிச்சாமி எம்ஜிஆரை மறந்து விட்டார். எடப்பாடி பழனிச்சாமிக்கு யாரை பார்த்தாலும் அமித்ஷா முகம் தான் தெரிகிறது. அவர் தான் அவருக்கு ஒனர்.
'கை' விட்டு போகாது
தமிழகத்தில் 200 தொகுதிகளில் திமுக வெற்றி பெறும். அதில் முதல் தொகுதியாக வேடசந்தூர் தொகுதி திமுக வெற்றி பெறும். என்னைக்குமே நம்மை விட்டு கை போகாது. நான் என்னுடைய கையை சொன்னேன். மேலும் உங்கள் மீது உள்ள நம்பிக்கையை கூறினேன்." என்றார்.












Click it and Unblock the Notifications