அதிக சீட் வாங்கித்தா என கேட்க வரவில்லை.. பழனி முருகன் கோவிலுக்கு சென்றது ஏன்? திருமாவளவன் விளக்கம்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார் விசிக தலைவர் திருமாவளவன். திருமாவளவன் பழனி மலையடிவாரத்தில் அமைந்துள்ள புலிப்பாணி ஆசிரமத்துக்குச் சென்று வணங்கினார் திருமாவளவன்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற தலம். முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றாக விளங்குகிறது பழனி. இங்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். தைப்பூசம், பங்குனி உத்திரம், சஷ்டி ஆகிய விஷேச நாட்களின் போது பல லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு இங்கு முருகனை வழிபடுவது வழக்கம்.

இந்நிலையில், பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. பழனி மலையடிவாரத்தில் உள்ள புலிப்பாணி ஆசிரமத்திற்கு சென்று தொட்டிச்சி அம்மன் மற்றும் புலிப்பாணி ஜீவசமாதியில் வணங்கினார் திருமாவளவன். புலிப்பாணி ஆசிரமத்தில் பழனி போகர் ஆதீனம் சிவானந்த புலிப்பாணி சுவாமிகள், திருமாவளவனை வரவேற்று பிரசாதம் வழங்கினார். திருமாவளவனுக்கு ஸ்படிக மாலை அணிவித்தார்.
தொடர்ந்து, முருகனை வழிபட்டார் திருமாவளவன். அவருடன் ஏராளமான விசிக நிர்வாகிகளும் உடனிருந்தனர். சனாதனத்துக்கு எதிராகவும், கடவுள் இல்லை என்றும் பேசி வரும் திருமாவளவன் எதற்கு கோவிலுக்குப் போகிறார் என எதிர் தரப்பினர் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.
பழனி முருகன் கோயிலுக்குச் சென்று வந்தது ஏன் என்பது குறித்துப் பேசிய திருமாவளவன், "தமிழ் கடவுள் முருகன். ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சித்தர் போகர் தான் வாழ்ந்ததற்கு அடையாளமாக நவபாஷாணத்தால் ஆன முருகர் சிலையை மலை மீது உருவாக்கி வைத்துள்ளார். புலிப்பாணி சித்தர் மற்றும் அவரது வாரிசுகள் இங்கு வாழ்ந்து மறைந்ததற்கான ஜீவசமாதிகள் உள்ளன. அவற்றையும் சென்று தரிசனம் செய்தேன்.
எனக்கு எந்த நேர்த்திக்கடனும் கிடையாது. மொட்டை போடுவதற்காகவும் பழனிக்கு நான் வரவில்லை, தேர்தலில் நிறைய சீட்களை வாங்கித்தா முருகா என கேட்கவும் நான் வரவில்லை, அமைச்சர் பதவி அல்லது துணை முதலமைச்சர் பதவி, முதலமைச்சர் பதவி கேட்டும் முருகனை தரிசனம் செய்ய வரவில்லை. எனது முன்னோர்கள் வாழ்ந்த இடம் என்பதால் அதைப் பார்க்க வந்தேன்.
5000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த போகர், பழனி மலை மீது இப்போது இருப்பது போல ரோப் கார், வின்ச் போன்ற எந்த வசதியும் இல்லாமல் இருந்த காலத்தில் எப்படி படிகளை அமைத்தார் எப்படி நவபாசான சிலையை செய்து கோவிலை கட்டினார் என்பதை காண்பதற்காக வந்தேன். ஏனென்றால் இது புராணக் கதை அல்ல. 5000 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வாழ்ந்தார் ஜீவசமாதி அடைந்தார் என்பதற்கான அனைத்தும் இங்கே உள்ளது" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications